Chillzee சமையல் குறிப்புகள் - தனிக்கூட்டு - தங்கமணி
தேவையான பொருட்கள்
1. தனியா----6 டீ ஸ்பூன்.
2. நீட்டு மிளகாய் வற்றல்--5.
3. கடலைப் பருப்பு--50 கிராம்.
4. புளி---எலுமிச்சை அளவு..
5. வெல்லம்---200 கிராம்.
6. நல்லெண்ணை---2 டேபிள் ஸ்பூன்.
7. தேங்காய்----ஒரு மூடி
8. கருவேப்பிலை--2 கொத்து.
9. மஞ்சள் பொடி--ஒரு சின்ன ஸ்பூன்.
10. கடுகு---1 ஸ்பூன்.
11. தேங்காய் எண்ணை----50 மில்லி
12. சாம்பார் பொடி--2 ஸ்பூன்.
13. உப்பு---ஒரு ஸ்பூன்.
செய்முறை;-
1.கடலைப் பருப்பில் ஒரு நாலு ஸ்பூன் எடுத்து வைத்துக்கொண்டு மீதமிருப்பதை தண்ணீரில் ஊறப் போடவும்.
2.புளியை தனியே அதிகம் தண்ணீர் விடாமல்(ஒரு டம்ளர் போதும்)ஊறப் போடவும்.
3.தனியா,மிளகாய் வற்றல்,கடலைப் பருப்பு(நாலு ஸ்பூன்) மூன்றையும் நல்லெண்னை விட்டு சிவக்க வறுக்கவும்.
4.ஒரு மூடி தேங்காயைத் துருவி துருவலில் பாதியை வறுத்த சாமான்களோடு சேர்த்து மிக்ஸியில் விழுதாய் அறைக்கவும்.
5.புளியை கனமான பாத்திரத்தில் கரைத்து ஊற்றி அடுப்பில் வைக்கவும்.அதில் ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்க்கவும்.
6.வெல்லத்தைப் பொடியாக்கிச் சேர்க்கவும் உப்பைச் சேர்க்கவும்.
7.ஊறவைத்திருக்கும் கடலைப் பருப்பைச் சேர்க்கவும்.
8.வெல்லம் கரைந்ததும் அறைத்து வைத்திருக்கும் விழுதைச் சேர்க்கவும்.(தேவையெனில் கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும்)
9.சாம்பார் பொடியைச் சேர்க்கவும்.
10.நன்றாகக் கிளரவும்..கெட்டியாக பாகு போல் வரும்..அடிப்பிடிக்காமல் பார்த்துக் கொள்ளவும்.
11.கொஞ்சம் தேங்காய் எண்ணை ஊற்றவும்.
12.தளதளவென்று கொதித்து கெட்டியாக கூட்டு போல் வரும்.அன்னிலையில் கொஞ்சம் தேங்காய் எண்ணையில் கடுகு கருவேப்பிலை போட்டு படபட வென வெடிக்க விட்டு மீதமிருக்கும் தேங்காய்த் துருவலை போட்டுக் கொஞ்சம் சிவந்ததும் கூட்டில் கொட்டிக் கிளரவும்.அடுப்பை அணைத்து விடவும். ஒரு ஸ்பூன் பச்சை தேங்காய் எண்ணை விடவும்.
இப்போது தளதள தனிக்கூட்டு தயார்.உப்பு, உறைப்பு,புளிப்பு,தித்திப்பு என்று எல்லாவித ருசியும் உள்ள இக்கூட்டு ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் வீட்டில் நடக்கும் ஒரு விசேஷத்தில் கட்டாயம் இடம் பெறும்.
பார்க்கத்தான் அதிக வேலை கொள்ளுமோ என்று தோன்றும்.ஆனால் செய்வது மிக எளிது.பொருட்களும் அதிகமாய்த் தேவை இல்லை.காரக் குழம்பு செய்யுமன்று இதை தொட்டுக்கொள்ள செமையாய் இருக்கும்.பிடிச்சா செய்யுங்க....நன்றி....