தொடர் - கீதம் சங்கீதம்....- 08 - தியாகராஜர் ஆராதனை - தேவி
ஹாய் friends...
மறுபடியும் உங்களை கீதம் சங்கீதம் தொடரில் சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சி. இந்த முறை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புவது தியாகராஜர் ஆராதனை.
கர்நாடக சங்கீதம் பற்றி அறிந்தவர்களுக்கு தியாகராஜர் ஆராதனை பற்றி தெரிந்திருக்கும். முறையாக சங்கீதம் கற்றுகொள்ளதவர்கள் கூட தியாகராஜருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி என்று தெரிந்து கொண்டிருப்போம்.
சங்கீத மும்மூர்த்திகளில் முதலில் பேசப்படுபவர் தியாகராஜர் .. திருவாரூரில் பிறந்து திருவையாறில் வாழ்ந்தவர். சிறு வயதிலேயே இசையில் புலமை பெற்றவர். மிக சிறந்த ராம பக்தரானா இவர் தன் தாய்மொழியான தெலுங்கில் அதிகமான கீர்த்தனைகள் இயற்றியவர்.
சுமார் இரண்டாயிரத்து நானூறுக்கும் மேல் கீர்த்தனைகள் இயற்றியுள்ளார். இவரின் காலத்துக்கு பிறகே கீர்த்தனைகள், நாம சங்கீர்த்தனம் என்று நிறைய வகைகள் கர்நாடக இசையில் ஏற்பட்டது.
அவரின் இசை தொண்டை போற்றும் விதமாக தான் இந்த தியாகராஜர் ஆரதானை நடைபெறுகிறது. தை மாதம் வரும் பௌர்ணமி கழிந்த பஞ்சமி அன்று காவேரி ஆற்றங்கரையில் திருவையாறு என்ற இடத்தில் தியாகராஜருக்கு ஆராதனை நடைபெறும்.
இந்த முறை தியாகராஜர் ஆரதானை பொங்கல் லீவில் வந்ததால் எனக்கு அதில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதுவரை பொதிகை டிவியில் பார்த்துக் கொண்டு இருந்த இந்த நிகழ்ச்சி நேரில் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
இந்த ஆராதனையில் கலந்து கொள்பவர்கள் அந்த இடத்தில அமர்ந்து கேட்டாலே அத்தனை பரவசம் கொடுக்கும் என்று கூற கேட்டு இருக்கிறேன். இந்த முறை எனக்கு அந்த அனுபவம் கிடைத்தது. உண்மையில் அத்தனை வித்வான்களை நேரில் பார்த்தது ஒருபுறம் மகிழ்ச்சி என்றால், அவர்களோடு நாமும் அமர்ந்து இருப்பது என்பது மிகபெரிய வரம் என்றே தோன்றியது.
ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் உலகில் உள்ள பல்வேறு இடத்திலிருந்து கர்நாடக சங்கீதம் பயின்றவர்கள் வந்து பாடி செல்கின்றனர். இங்கு அமர்ந்து பாடுவதையே பல வித்வான்கள் முதல் மேடை கச்சேரியாக எண்ணுகின்றனர்.
ஐந்தாம் நாளான பஞ்சமி அன்று காலையில் தியாகரஜர் உற்சவ மூர்த்தியை எடுத்துக் கொண்டு உஞ்சவ்ருத்தியாக தியாகராஜரின் நாம சங்கீர்த்தனம் பாடி ஊர்வலம் எடுத்து செல்கின்றனர். ஊர்வலம் மீண்டும் அவர் கோவிலை அடைந்த பின் மங்கள இசையான நாதஸ்வரத்தோடு ஆரம்பிகின்றது.
நாதஸ்வர கச்சேரி முடிந்த பின் யார் யார் எல்லாம் கலந்து கொள்ள முடியுமோ அத்தனை சங்கீத வித்வான்களும் அந்த பந்தலில் அமர்ந்து அவரின் பஞ்சரத்தின கீர்த்தனைகளை ஒரே குரலாக பாடுகின்றனர். அதை கேட்கும்போது நம் மெய் சிலிர்க்கிறது.
அவரின் இரண்டாயிரம் பாடல்களில் இந்த ஐந்து மட்டும் ஏன் பாடுகின்றனர் என்பதை தெரிந்து கொள்ள அந்த பாடல்களின் மகத்துவம் பற்றி இதோ.
இந்த ஐந்து கீர்த்தனைகளும் ஆதி தாளத்தில் மட்டுமே பாடப்பட்டுள்ளது.
1 . முதல் பாடல் ஜகதாநந்த காரகா..
நாட்டை ராகத்தில் அமைந்த இந்த பாடல் அவரின் இஷ்ட தெய்வமான ராமரின் மேல் பாடியது. அவரின் பஞ்சரத்ன கீர்த்தனைகளில் இந்த பாடல் மட்டுமே சமஸ்க்ருதத்தில் இயற்றியது. மற்ற நான்கு பாடல்களும் தெலுகு கீர்த்தனைகளே. இந்த பாடலில் உலகில் நடக்கும் எல்லா விஷயங்களும் ராமரின் செயல்களே என்ற பொருள் தோன்றும்படி பாடி உள்ளார்.
இந்த பாடல் முதல் ரத்தினமாக போற்றபடுவதற்கு காரணம் நாட்டை ராகத்திற்கு உண்டான தைவதம் என்ற ஸ்வரம் இல்லாமல் இந்த பாடல் தொகுத்து இருப்பார். ஆனால் ராகத்தின் அழகு கெடாமல் கையாண்டு இருப்பார்.
2. துடுகுகல
இந்த பாடல் பஞ்சரத்ன கீர்த்தனையில் இரண்டாவது பாடல். தெலுகு மொழியில் கௌளை ராகத்தில் இயற்றப்பட்ட இப்பாடலும் ராமரிடம் அவர் முறையிடுவதாக அமைந்துள்ளது. தன் வாழக்கையில் தான் செய்த தவறுகளை பட்டியிலிட்டு ராமரிடம் முறையிட்டு இந்த பாவங்களுக்கு விமோசனம் கொடுக்குமாறு கேட்குமாறு இயற்றியுள்ளார். அவர் தன்னுடைய பாவ பட்டியலில் தன்னை சுற்றியுள்ள மக்கள் பட்டினியால் வாடும்போது தான் மட்டும் வயிறு முழுக்க சாப்பிட்டது கூட பாவம் என்று எழுதுகிறார். இந்த கீர்த்தனையில் கௌளை ராகத்தின் அழகான க எனப்படும் காந்தரத்தை தவிர்த்து பாடலுக்கு ஸ்வரம் அமைத்துள்ளார். ஆனால் இதுவும் ராகத்தின் அழகை குறைக்கவில்லை.
3 . சாதிஞ்சனே
ஆரபி ராகத்தில் இயற்றப்பட்ட இப்பாடல் மிகுந்த துள்ளலோடு ஸ்வரம் போடப்பட்ட ஒரு பாடல். கிருஷ்ணரை மையமாக கொண்ட பாடல் என்பதால் இனிமையும், குறும்பும் , துள்ளலும் நிறைந்த composition என்று சொல்லலாம். இந்த பாடலை பாடும்போது ஒரு புன்னகையோடு பாட தோன்றும்.
4. கன கன ருசிர
நாலாவது கீர்த்தனை இது தெலுகு மொழியில் இயற்றப்பட்டது. வராளி ராகத்தில் இயற்றப்பட்ட இப்பாடல் உயிரோட்டமான பாடல் என்று சொல்லபடுகிறது. இது மிகவும் அபூர்வமான ராகம். இதை கற்றுகொள்வதும், கற்றுக் கொடுப்பதுவும் மிகவும் சவால் மிகுந்தது. அந்த ராகத்தில் இயற்றப்பட்ட இப்பாடலை ஒரு ரத்தினமாக கருதுகிறார்கள்.
5 . எந்தரோ மகானுபாவலு
ஸ்ரீ ராகத்தில் அமைந்துள்ள இந்த பாடல் தன்னுடைய மானசீக குரு என்று நாரதர், சனுகா போன்ற அத்தனை மகான்களுக்கும் தன்னுடைய வணக்கத்தை தெரிவித்து கொள்வதாக கூறுகிறார். கடவுளை வணங்குபவர்களையும் பெருமைபடுத்தும் விதமாக பாடல் வரிகள் எழுதியுள்ளார். இந்த ஸ்ரீ ராகத்தின் முக்கியத்துவமான தைவதம் என்ற ஸ்வரத்தை இந்த பாடலில் பயன்படுத்தாமல் ராகத்தின் அழகை கொடுத்து இருப்பார் தியாகராஜர்.
மேலே சொல்லப்பட்டுள்ள விவரங்கள் நான் இன்டர்நெட் மூலம் தெரிந்து கொண்ட தகவல்கள். இதில் எதாவது தவறு இருந்தால் பொறுத்துக் கொள்ளுங்கள்,
இந்த வருட கீர்த்தனை இன்னும் youtube லே அப்டேட் ஆகாததால் போன வருடம் நடந்த ஆராதனை லிங்க் கொடுத்துள்ளேன்.. நீங்களும் பார்த்து மகிழுங்கள்.
மீண்டும் சந்திப்போம்.
{kunena_discuss:1092}