02. நலமறிய ஆவல்..!! - வசுமதி
கோதுமைக்கு நிகராய் தென் இந்தியாவில் விளையும் தானியம் என்னனு கண்டு பிடிச்சுட்டீங்களா..??
திருச்செந்தூர் முருகன் கோவிலில் "சூரஸம்ஹரம்" முடிந்தவுடன் இந்த தானியத்தை படைத்துத் தான் சாமி கும்பிடுவார்கள்..போர் செய்த களைப்பை போக்கக் கூடிய சக்தி இந்த தானியத்திற்கு உண்டு..
இந்த தானியத்தின் பெயர் "தினை" (Foxtail millet)..
பண்டைக்காலத்திலிருந்தே, உணவு தானியமாக பயிரிடப்பட்டு வருகின்றது தினை. இது உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் தானிய வகைகளில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தினை உற்பத்தியில் சீனா முதலிடத்தையும், இந்தியா இரண்டாவது இடத்தையும் கொண்டுள்ளது.
ஐரோப்பா கண்டத்தில், இந்த தானியம் கற்காலத்தில் அறிமுகமானாலும், கிழக்காசிய நாடுகளில், முக்கியமான சீனாவில் இருந்துதான் மற்ற இடங்களுக்குப் பரவியுள்ளது.
பழங்காலத்தில் முதலாவதாக பயிரிடப்பட்டு மனிதனால் உபயோகிக்கப்பட்ட தானிய வகை தினை தான். அதுவும் கி.மு.6000 கால கட்டத்திலேயே சீனாவில் பயிரிடப்பட்டு உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது. இது கிழக்காசியாவில் 10,000 ஆண்டுகளாகப் பயிரிடப்படுவதாகக் கூறப்படுகிறது..
தற்பொழுதும் சீனாவின் வட மாநிலங்களில் அதிகம் பயிரிடப்படும் தானியம் தினை தான்.
தினைக் கதிர் என்பது நரி வாலைப் போல பச்சை நிறத்தில் காட்சியளிப்பதால் ஆங்கிலத்தில் இது பாக்ஸ் டைல் மில்லட் என்று அழைக்கப்படுகின்றது.
இதனை சைனீஸ் மில்லட், ஜெர்மன் மில்லட், ஹங்கேரியன் மில்லட் என்று பல வகையாக பிரிக்கிறார்கள்.
தினை ஒரு ஓராண்டுச்செடி. தினையின் தாள் (ஸ்ப்ரிங் ஆனியன் போல்) பசுமையானது. இலை நீளமானது. தினைத் தாளின் அடியில் சுற்றிலும் பசிய வேர்கள் (குட்டிக் குட்டி வேர்கள் - பீட் ரூட்டில் உள்ளது போல்) பரவி இருக்கும்.
குறுந்தொகை, நற்றிணை, மலைபடு கடாம், ஐங்குறு நூறு, அகநானூறு, திருமுருகாற்றப்படை,பெரும்பானாற்றுப்படை ஆகிய நூல்களில் தினை பற்றி பாடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தினை மிகப்பழங்காலந்தொட்டு விளைந்து வருகின்றது என சங்க இலக்கியத் தாவரவகைப் பாட்டியல் நூல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கதிர்களை கிளிகள் கவர்ந்து உண்ணும். மேலும் யானை மேய்ந்து அழிப்பதும் உண்டு. ஆதலால் இதனைக் காப்பதற்கு மலை உச்சியில் ஒரு பரண் அமைப்பர்.
அவற்றில் இருந்து தட்டை, கவண், தொண்டகச் சிறுபறை முதலியவற்றால் குருவிகளையும், கிளிகளையும் விரட்டுவர். யானை, பன்றி முதலியவை தினையை கவர்ந்து அழிக்காமல் அவற்றை விரட்டுவதற்கு பறை ஒலி எழுப்புவதும் உண்டு.
தினையில் உள்ள இரும்புசத்தின் அளவு, மற்ற தானியங்களைவிட, குறிப்பாக அரிசி,கோதுமை, ராகியைவிட, இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. கால்சியத்தின் அளவும், மற்ற தானியங்களை விட, கொஞ்சம் அதிகமாக உள்ளது.
உமி நீக்கிய தினை தான் உணவாகிறது. இதனை களியாகவும், கஞ்சியாகவும் செய்து உண்ணலாம்.பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே, இதனை முறுக்கு செய்யவும், தேனுடன் கலந்து சாப்பிட்டும் வந்துள்ளனர்.
இதனால் அவர்களின் உடலானது தேக்கு மரம் போல் திடமாக இருந்தது.
இன்று இவற்றின் உணவுப் பயன்பாடு குறைந்து கடைசியாக அரிசியையும் தவிடு நீக்கி, பாலீஷ் செய்து சாப்பிடும் நிலைக்கு வந்து விட்டோம். இதனால் இன்று உடல் வலுவிழந்ததோடு நோயின் பாதிப்புக்கும் ஆளாகிறது.
இப்படி நாம் இழந்த பொருட்களுள் தினையும் ஒன்று.
மலைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேனும், தினை மாவுமே உணவாக இருந்தது. தற்போது அவர்களும், தினை என்றால் என்ன என்று கேட்கின்றனர். தினையில் உடலுக்குத் தேவையான புரத சத்துகளும், ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன.
சரி எப்போ நாம் மைதா மாவுக்கு வருவோம்..
"ஒரு சான் வயிறு இல்லாட்டா, இந்த உலகில் ஏது கலாட்டா..??
உணவு பஞ்சம் வராட்டா, நம் உசுரை வாங்குமா பரோட்டா..?? "
இந்த பாட்டு எந்த படத்துல வருதுன்னு கண்டுபிடீங்க...நாம் அடுத்த பதிவில் சந்திக்கலாம்...
நலமறிய ஆவல்...
{kunena_discuss:1112}