கதை எழுதலாம் வாங்க! - 01
என்னடா chillzeeயில் இப்படி ஒரு கட்டுரைன்னு நீங்க யோசிக்கலாம்.
கதை எழுத / படிக்க எந்த கட்டுப்பாடும் இல்லாமல் முழு சுதந்திரம் தருவது நம் chillzee இணையத்தளம் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
இந்த கட்டுரை, கதை எழுத ஆர்வம் இருந்தும் அதை எங்கே எப்படி தொடங்குவது என்று புரியாமல் இருக்கும் பல தோழி / தோழர்களுக்காக.
இதுவரை எழுத ஆர்வம் இல்லை என்றாலும் இனிமேல் எழுதலாமே என்ற எண்ணம் வந்தாலும் இதை படியுங்கள்.
சரி, கதை எழுதுவது என்று முடிவு செய்து விட்டீர்கள். அடுத்து எங்கே இருந்து தொடங்குவது?
உங்களின் கதை கருவை தேர்வு செய்யுங்கள்.
இது தான் மிக மிக முக்கியமான பகுதி.
பெரும்பாலான கதைகள் வெற்றி பெறுவது அதன் கருவிற்காக தான்.
ஒய்வு நேரத்தில், பயணம் செய்யும் போது, சமையல் செய்யும் போது, வீட்டை சுத்தம் செய்யும் போது என உங்கள் கற்பனை குதிரையை தட்டி விடுங்கள்.
நம்ப மாட்டீர்கள், நீங்கள் யோசிக்க ஆரம்பிக்க வேண்டியது தான், பல பல ஐடியாக்கள் உங்களை தேடி வரும்...!
உங்களின் நினைவாற்றல் குறைவு என்றால், இது போல ஐடியாக்கள் உதிக்கும் போது அதை ஒரு சின்ன நோட்புக்கில் இல்லை மொபைலில் பட்டியலிட்டு வையுங்கள்.
ஒருவேளை உங்களுக்கு ஒரு ஐடியாவும் வரவில்லை என்றால் என்ன செய்வது?
ஹ்ம்ம்..... கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான்...! ஆனால் கவலை படாதீர்கள். எல்லா பிரச்சனைக்கும் ஒரு தீர்வு இருக்கிறது.
உங்களுக்கு ஐடியா வராவிட்டால் பரவாயில்லை, உங்களை சுற்றி இருப்பவர்களை பாருங்கள்....
உலகத்திலேயே சிறந்த (அல்லது மோசமான ) கணவர் / மனைவி என நீங்கள் நினைக்கும் உங்கள் வாழ்க்கை துணையை கவனியுங்கள்...!
உங்கள குழந்தைகளை பாருங்கள்...!
அம்மா, அப்பாவை பாருங்கள்....!
இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது பேஸ்புக், அதில் சென்று உங்கள் நட்பு வட்டத்தை பாருங்கள்....
கட்டாயம் யாரேனும் ஒருவர் உங்களுக்கு ஒரு கதைக்கான கருவை தருவார்கள்....!
ஹுஹும்ம்ம்ம்.... ஒரு ஐடியாவும் வரவில்லை என்கிறீர்களா? சின்ன ப்ரேக் எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு சில நாட்கள் கழித்து மீண்டும் முயற்சி செய்து பாருங்கள் (குட் லக்!)
சரி, உங்களுக்கு தோன்றிய பல பல ஐடியாக்களை பட்டியலிட்டாகிவிட்டது. இனி அதில் இருந்து உங்கள் கதைக்கான கருவை தேர்வு செய்வது எப்படி?
உங்கள் பட்டியலில் இருப்பதிலேயே உங்களுக்கு மிக மிக பிடித்த கருவிற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
அது போலவே உங்களுக்கு பிடித்த கதை வகையையும் தேர்வு செய்யுங்கள்.
உதாரணமாக நீங்கள் குடும்ப கதைகள் விரும்புபவர் என்றால், உங்கள் பட்டியலில் இருக்கும் உங்களுக்கு மிகவும் பிடித்த குடும்ப கதைக்கான கருவை தேர்வு செய்யுங்கள்.
குடும்ப கதை பிரியர் பேய் கதை எழுத கூடாதா என்று நீங்கள் கேட்கலாம்.
எழுதலாம் எழுதக் கூடாது என்று இல்லை. ஆனால் இது புதிதாக கதை எழுதுபவர்களுக்கான கட்டுரை என்பதால், மனதுக்கு பிடித்ததையே செய்ய சொல்கிறோம்.
நமக்கு பிடித்த விஷயத்தை செய்யும் போது எப்பொழுதும் ஈடுபாடு மிக அதிகமாக இருக்கும்.
சரி உங்க கதைக்கான கருவை தேர்வு செய்தாகி விட்டதா? இனி அடுத்த முக்கிய கட்டத்திற்கு செல்வோம்.
உங்கள் கதையை வடிவமைப்போம்.
உங்கள் கதையை ஒரு வரியில் எப்படி சுருக்கி சொல்வது என்று யோசித்து பாருங்கள்.
உதாரணமாக நம் chillzee தொடர் மனம் விரும்புதே உன்னை கதையை எடுத்துக் கொண்டால், “மூன்று தோழியரை சுற்றி அவர்களின் காதல், குடும்பம் என்று போகும் கதை” என்று சொல்லலாம்.
chillzeeயில் வெளிவந்த வளர்மதியின் “இமைகளுக்குள்” கதையை எடுத்துக் கொண்டால் “ஒரு ஊரில் நடக்கும் அமானுஷ்ய நிகழ்வுகளுக்கான காரணம் என்ன என்று கண்டு பிடிக்கும் கதை” என்று சொல்லலாம்.
இதே போல உங்களுக்கு பிடித்த, நீங்கள் தேர்வு செய்திருக்கும் கருவிற்கான கதை சுருக்கத்தை எழுதுங்கள்.
அடுத்து என்ன செய்வது என்று நான் நாளை சொல்கிறேன்.
உங்களின் கருத்துக்கள் கேள்விகள் வரவேற்க்கபடுகின்றன!
கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே இருக்கும் share துணை கொண்டு உங்கள் உறவினர், நட்புக்கள் அனைவரிடமும் பகிர்ந்துக் கொள்ளுங்கள். உங்களை போலவே அவர்களுக்கும் சில நல்ல விஷயங்கள் தெரியட்டுமே....! நாளை சந்திப்போம்!