வாருங்களேன் கொஞ்சம்...ஆன்மிகப் பக்கமும் - குருவே சரணம் - 01 - தங்கமணி சுவாமினாதன்
தெளிவு குருவின் திருமேனி காண்டல்..
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்..
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்..
தெளிவு குருவின் திருவுரு... சிந்தித்தல்தானே.
ஜீவ யாத்திரையில்" மனிதப் பிறவி" புண்ணியத்தின் பயனாகக் கிடைத்த ஒரு அரிய பரிசு.பிறவிப் பயனை உணர்ந்தவனுக்கு இது பரிசு.அறியாதவனுக்கும் புரியாதவனுக்கும் இது தண்டனையாக அமைந்து விடுகிறது.பரிசாக மாற்றிக்கொள்வதும் தண்டனையாக மாற்றிக் கொள்வதும் நம் வசத்தில்தான் உள்ளது. மனித ஜாதி தவிற மற்ற உயிரினங்களின் வாழ்வை ஊன்றி கவனித்தால் ஓர் உண்மை புலனாகிறது.பாவத்தின் பலனை அனுபவிக்க வந்த பிறவிகள் அவை.மனித ஜாதி தவிற மற்ற உயிரினங்கள் பாபம் செய்ய வாய்ப்பில்லை.புண்ணியம் செய்யவும் வழியில்லை.
ஒரு புலி மானை அடித்துத் தின்பதால் அதற்குப் பாபம் சேராது.மனிதப் பிறவி தவிற மற்ற உயிரினங்களுக்கு பாவ புண்ணியமெல்லாம் தெரியாது.பாவத்தின் கணக்கைக் கழிக்க வந்த பிறவி நமது மனிதப் பிறவி.இப்பிறவியில் புண்ணியம் செய்கிறோமா பாவம் செய்கிறோமா என்பதை வைத்தே நமக்கு அடுத்த பிறவி அமைகிறது.
இன்றைய வாழ்க்கை முறையில் புண்ணியம் என நினைத்து செய்யப்படும் செயல்களில் கூட பாவம் அறியாமலேயே கலந்து விடுகிறது.
இப்பிறவி போனால் எப்பிறவி வாய்க்கும் நமக்குத் தெரியாது.சித்ரகுப்தனிடம் சென்று கேட்கவும் முடியாது.நம் விருப்பதிற்கேற்ப தெர்ந்தெடுக்கவும் முடியாது.
நமக்குத் தேர்ந்தெடுக்கு திறமை இருந்தும் நமது தாயையோ தந்தையையோ நாமே தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு நமக்கில்லை.ஜாதி,குலம் கோத்திரம் வடிவம் ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும் நமக்கு அளிக்கப் படவில்லை.மனைவியையோ கணவனையோ மட்டுமே தேந்தெடுக்கலாம்.அதுவும் கூட ஏற்கனவே ஆண்டவனால் தீர்மானிக்கப்பட்டதுதான்.
கிடைத்திருக்கும் மனிதப் பிறவியைத் தண்டனையாக மாற்றிக்கொள்வதும் பரிசாக பரிமளிக்கச்செய்வதும் நம் கைகளில்தான் உள்ளது.கிடைத்திருக்கும் இப்பிறவியை பரிமளிக்கச் செய்ய நம் தனி முயற்சி மட்டும் போதாது.இதற்கு இரு துணைகள் தேவை.
ஒன்று இறைவன் மற்றொன்று குரு.இவ்விருவரும் ஒருவராக கண்ணனாய் அர்ஜுனனுக்குக் கிடைத்தார் .நமக்கு அதுபோல் கிடைக்க வாய்ப்பில்லை.அனால் இம்மனிதப்பிறவியில் நமக்குக் கிடைத்திருக்கும் குருவையே நாம் இறைவனாகக் கருத வேண்டும்.உத்தம குரு கிடைத்து விட்டால் அவரை உணர்ந்து கொண்டு விட்டால் வாழ்வு பத்திரமாகிவிடும்,பவித்ரமாகிவிடும்.
மனித உருவில் நடமாடும் தெய்வமாக இருந்து அகிலம் தோறும் ஆன்மிகம் வளர்த்த காஞ்சி மஹாபெரியேவரே நம் குரு என்று சொன்னால் அது மிகை இல்லை.சத்தியம்.
அவர் காட்டிய பாதையில் சென்று கஷ்டமே வராமல் இருக்க அவர் கூறிய வழியினைப் பின்பற்றினால் அதுவே நமக்கு இப்பிறவியை பரிசாக மாற்றிப் பரிமளிக்கச் செய்யும்.
இது உறுதி.
கஷ்டமே இல்லாமல் இருக்க காஞ்சி மகான் அருளியவற்றை சில்சீயின் அனுமதியோடு அடுத்த வாரம் பார்ப்போமா? நன்றி...நன்றி..இக் கட்டுரையைப் படித்தவர்களுக்கு நன்றி. வெளியிட்ட சில்சீக்கு மிகவும் நன்றி