பிரம்மத்தைத் தேட... - தங்கமணி சுவாமினாதன்
ராம் நாத் பதிமூன்று வயது பாலகன்.தாய் இல்லை.தந்தை சிவயோகி மிகவும் இறை நம்பிக்கை கொண்டவர்.சதா பரப்பிரம்மம்..பரப்பிரம்மம் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்.சிவன் கோயிலுக்குத் தினசரி பூமாலை,வில்வ மாலை கட்டித்தருபவர்.சிவனிடம் ஆழ்ந்த பக்தி அவருக்கு.
தாயில்லா மகனை கஷ்டப் பட்டே வளர்த்து வந்தார்.மகனை கல்விசாலைக்கும் அனுப்பவில்லை.
தினமு அவர் பரப் பிரம்மம் பரப் பிரம்மம் என்று சொல்லிக்கொண்டே இருப்பதைக் கண்ட ராம் ஒரு நாள் தந்தையே பரப் பிரம்மம் என்றால் என்ன?என்று கேட்டான்.
மகனே ..உலகைப் படைத்ததும்,உலகத்தில் அனைத்து ஜீவன்களைப் படைத்ததும்,படைத்த அனைத்து உயிர்களைக் காப்பதும் யாரோ அவனே பரப்பிரம்மம் என்றார்.
தந்தையே அப்பரப்பிரமத்தை நான் காண விரும்புகிறேன்..அவனைச் சென்று பார்க்கும் வழியை எனக்குச் சொல்லுங்கள் தந்தையேஎன்றான்.
சிரித்தார் சிவயோகி.மகனே அவரைக் காணும் வழி எனக்குத் தெரியாது.நீயாகவேதான் பரப்பிரம்மத்தை அறிந்து கொள்ள வேண்டும்.ஆனால் ஒன்று மட்டும் சொல்வேன்.தக்க குருவின் துணையோடே நீ பிரம்மத்தை அறிந்து கொள்ள முடியும் என்றார்.
தந்தையே இனி ஒரு கணமும் வீணடிக்க மாட்டேன்.பிரம்மத்தை உணர்த்தும் குருவைத் தேடிச் செல்கிறேன்.
பரப்பிராத்தை அறியாமல் வீடு திரும்ப மாட்டேன் என்று சொல்லி தந்தையிடம் விடை பெற்று வீட்டைவிட்டு வெளியேறினான்.
சிவயோகி மகனைப் பிரிந்ததால் மிகவும் வருந்தினார்.என்றாலும் மகன் உலக அனுபவத்தை நன்கு பெறுவான் என்று எண்ணி மனதைத் தேற்றிக் கொண்டார்.
வீட்டை விட்டு வெளியேறிய ராம்நாத்துக்கு அவ்வளவு எளிதாய் இல்லை வெளியுலகம்.உணவுக்கும், இரவு படுக்கும் இடத்திற்கும் மிகவும் சிரமாய் இருந்தது.என்றாலும் பிரம்மத்தை அறிய வேண்டும் என்ற ஆவலால் பல நேரம் பட்டினியைப் பொறுத்துக் கொண்டான்.கண்களில் பட்டவர்களிடம் எல்லாம் பிரம்மத்தை அறிவீர்களா?அவன் எங்கே இருக்கிறான்?அவனை அடையும் வழி யாது?அப்படி அறிந்திருந்தால் எனக்குச் சொல்வீர்களா என்று கேட்டான்.சிலர் பாலகன் எதோ கேட்கிறான் என நினைத்து பிரம்மம் என்றால் என்னவென்று தமக்குத் தெரியாது என்றனர்.சிலர் அவனைக் கேலி செய்தனர்,சிலர் அவனைப் பைத்தியம் என்றனர்.சிலர் பிரம்மம் பற்றிச் சொல்வதாகச் சொல்லி அவனை வேலை வாங்கினர்.யாரிடமிருந்து அவனால் சரியான பதிலையும் பிரம்மத்தைக் காணும் வழியையும் பெற முடியவில்லை.
ராம்னாத் வீட்டை விட்டு வெளிவந்து ஆறு மாதங்கள் ஓடிவிட்டன. பலன் ஏதும் கிட்டவில்லை.அவன் மனம் வெதும்பி கால் போன போக்கில் நடந்து சென்றான்.பசி காதை அடைத்தது. தாகத்தால் நா வரண்டது.
அப்படி நடந்து வரும் வழியில் ஆறு ஒன்று இருந்தது.அதில் தண்ணீர் அருந்தினான் ராம்னாத்.அப்போது அங்கு ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவனைக் கண்டான்.
அச் சிறுவன் ராம்னாத்தை பார்த்து தம்பி உன்னைப் பார்த்தால் வெகு தொலைவிலிருந்து வருவதைப் போல் தெரிகிறது.பசியும் களைப்பும் உன் முகத்தில் தெரிகிறது.இதோ இது எனது பகலுக்கான உணவு.இதனை நீ உண்டு பசியாறி பின் ஓய்வெடுப்பாய் என்றான்.
அண்ணா..உங்களின் அன்புக்கு மிகவும் நன்றி..எனக்கு உணவு எதுவும் இப்போழுது தேவை இல்லை.ஆனால் நீங்கள் எனக்கு ஓர் உதவி செய்வீகளா?எனக் கேட்டான்.
என்னால் முடியக் கூடியதைச் செய்வேன் சொல்வாய் தம்பி என்றான் ஆடு மேய்க்கும் சிறுவன்.
அண்ணா... நான் பிரம்மத்தைத் தேடி கடந்த ஆறு மாதங்களாய் அலைகிறேன்.பிரம்மம் எனக்கு இன்னும் தென்படவில்லை.நீங்கள் அறிவீரா பிரம்மத்தை?அப்படி அறிவீராயின் எனக்கு பிரம்மத்தை அடையும் வழியைக் கூறுவீரா?எனக் கேட்டான்.
கடகடவென்று சிரித்தான் ஆடு மேய்க்கும் அச் சிறுவன்...பிரம்மமா..?அப்படி யென்றால் என்ன?ஆடு மாடு மேய்ப்பது ஒன்றையே நான் அறிவேன்.மற்றபடி பிரம்மத்தையெல்லாம் நான்றியேன் என்றான்.
ராம்னாத்தின் முகம் வாடிப் போயிற்று.
தம்பி வருந்தாதே...அதோ பார்..அங்கே ஒரு குடில் தெரிகிறது அல்லவா?என்று சொல்லி சிறுது தொலைவில் இருந்த குடில் ஒன்றைச் சுட்டிக் காட்டினான்.
ஆம் தெரிகிறது என்றான் ராம்னாத்.
அக்குடிலில் ரிஷி ஒருவர் வசிக்கிறார்.தினமும் தீ வளர்த்து மந்திரம் செபித்து ஏதோ செய்வார்.தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் கூட உணவும் நீருமின்றி தியானம் செய்வார்.அவர் ஒருவேளை நீ தேடும்.. என்ன அது?பி..பி..பி..
பிரம்மம்..
ஆங்...பிரம்மம்...அது பற்றி அவரிடம்..சென்று கேட்டுப் பாரேன்.அவருக்குத் தெரிந்திருக்கலாம் என்றான்.
அவனுக்கு நன்றி கூறிவிட்டு மனதில் நம்பிக்கையோடு ரிஷியின் குடிலை நோக்கி விடுவிடுவென நடந்தான் ராம்னாத்.
கண்களை மூடி தியானத்தில் அமர்ந்திருந்தார் ரிஷி.எதிரில் அமர்ந்து அவரின் முகத்தையே பார்த்தபடி நெடு நேரம் அமர்ந்திருந்தான் ராம்னாத்.