பாண்டுரங்கன் பக்தர்கள் கதை – 04 - கபீர் தாஸர் - பகுதி 04 - தங்கமணி சுவாமினாதன்
மகன் கமால் கழுத்தறுபட்டு இறந்தான் என்ற செய்தி கேட்டு தாங்கமுடியாத துக்கத்தை அடைந்த சுந்திரா துக்கத்தையும் பீரிட்டெழுந்த அழுகையையும் அடக்கிக்கொண்டு பக்தர்களுக்கு உணவளிக்க சமையல் செய்வதில் ஈடு பட்டார்.
முதலில் பஜனையால் வீடே அமர்க்களப்பட்டது.வந்திருந்தவர்கள் அறிவார்களா என்ன கபீரின் மகன் கமால் இறந்துவிட்டான் என்பதை.எல்லாம்இறைவனின் சோதனை என்று எண்ணிய கபீரும் சுந்தராவும் அமைதியாக இருந்தனர்.
ஆயிற்று.வந்தவர்களெல்லாம் திருப்தியாய் உண்டு மகிழ்ந்து கபீரையும் சுந்தராவையும் வாயார வாழ்த்தினர்.
வந்த அனைவரும் இருவரிடமும் விடை பெற்றுக் கிளம்பினர்.அவர்களை வழியனுப்ப அவர்களோடு சிறிது தூரம் நடந்தார் கபீர்.அபோதுதான் அந்த அதிசயம் நடந்தது.ஆம்..கமாலின் தலையற்ற முண்டம் எவ்விடத்தில் கட்டித் தொங்கவிடப் பட்டிருந்ததோ அவ்விடத்தைப் பக்தர்கள் கூட்டம் நெருங்கியபோது தலையற்ற கமாலின் உடல் அவர்களைக் கைகளைக் கூப்பி வணங்கியது.அங்கிருந்த அனைவரும் இக்காட்ச்சியைக் கண்டு அதிசயித்தனர்.அபோது வானில் ஒரு அசரீரி கேட்டது.
கபீர்..உன்னை சோதிக்கவே இவ்வாறு செய்தோம்.ஒரு மனிதன் பொக்கிஷமாகக் கருதுவதும் நேசிப்பதும் தன் மனைவியையும் தான் பெற்ற மக்களையும்தான்.நீ உன் மனைவியையும் மகனையும் தியாகம் செய்து பலமுறை உன் தெய்வ பக்த்தியை நிரூபித்துள்ளாய்.பாசத்தையும் பக்திக்காக வென்றவன் நீ.இனியும் உன்னை சோதித்தல் ஆகாது.வீட்டிலிருக்கும் கமாலின் தலையைக் கொண்டுவந்து இம்முண்டத்தின் மீது வை.கமால் உயிருடன் எழுவான் என்றது அவ்வசரீரி.
கபீரும் அவ்வாறே செய்ய என்ன அதிசயம் கமால் உயிருடன் மீண்டான்.பக்தியால் விளைந்த இவ்வதிசயதைக் கண்ட மக்கள் கபீரின் பக்தியைப் போற்றினர்.அவரின் புகழ் திக்கெட்டும் மேலும் மேலும் பரவியது.பக்தி மார்க்கம் தழைத்தது.இறைவன் சுகப்பிரம்மத்தை எதற்காக இப்பூவுலகிற்கு அனுப்பினாரோ அக்காரணம் சிறப்பாகவே நடந்தது.கபீரும் கமாலும் ஊர் ஊராய்ச் சென்று பக்தியைப் பரப்பினர்.
இப்படி கபீரின் வாழ்க்கை சென்றுகொண்டிருந்த வேளையில் சில இஸ்லாமிய அன்பர்கள் கபீரிடம்..கபீர் இஸ்லாமிய குடும்பத்தில் வளர்ந்த தாங்கள் ஓர் முறையேனும் மெக்காவுக்குச் செல்ல வேண்டும் என வேண்டினர்.கபீரும் அவர்கள் சொல்வதும் சரியானதே என எண்ணி மெக்காவுக்குச் சென்றார்.அங்கும் போய் ராம பஜனை செய்தார்.அங்கு தங்கியிருந்த வேளையில் கபீருக்கு உடல் நலமின்றி போனது.கபீர் மெக்காவிலேயே ஜீவ சமாதி அடைந்தார் என்பர் அறிந்தோர்.இப்போது மெக்காவுக்குச் செல்லும் முஸ்லீம் அன்பர்கள் கபீரின் சமாதிக்குச் சென்று வருவதாகச் சொல்லப்படுகிறது.
கபீர்தாசர் ராமன் மீது பாடிய பாடல்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.ஆனாலும் அவரின் பாடல்கள் தமிழில் மொழிபெயர்க்கப் படாததால் தமிழர்களால் அதிகமாக அறியப்படவில்லை.அவரின் பாடல்கள் பொருள் பொதிந்தவை கேட்கக் கேட்கத் தெவிட்டாதவை என்பது அம் மொழி அறிந்தவர்களின் கருத்து.ஆண்டவன் சோதிப்பான் ஆனால் கைவிடமாட்டான் என்பது எவ்வளவு சத்தியம்..
முடிந்தது
இதுவரை நான் எழுதியுள்ள பாண்டுரங்கன் பக்தர்கள் கதையைப் படித்தவர்களுக்கும்..படித்து கமென்ட் கொடுத்தவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி..நன்றி..நன்றி..வணக்கம்.