இவளின் நாட்குறிப்பிலிருந்து...!! - ஸ்வேதா சந்திரசேகரன்
"இது ஒருதலை காதலியின் புலம்புதலாகவும் எடுத்துக்கொள்ளலாம். இல்லை மீரா ராமின் 'அவளின் டைரி' ஸ்வேதாவின் எழுத்தில் சுருக்கமாக என்றும் எடுத்துக்கொள்ளலாம், ஆனால் விளக்கமாக மீராவின் கவிதை படித்துவிட்டு அதன் தாக்கத்தில் என் கற்பனையும் கலந்த கவிதை தான் இது. மீராவிற்கு நன்றி"
யாரோ எவனோ என்று
எங்கேயோ இருந்தவனே!!
அருகே எப்போது வந்தாய்..?
எல்லாமுமாக எப்போது ஆனாய்??
வெறும் பார்வையிலும்
அர்த்தமற்ற அக்கறையிலும் - யதார்த்தமான
விசரிப்புகளிலும் இதயம் இடம் மாறுமா??
இடம் மாற்றம் இல்லையோ அது??
இரும்பு மனதை மயிலிறகால்
வருடியப் படியே திறந்தது
நீ மட்டும் தானா??
நான் இல்லையோ??
திறந்த மனம் மௌனமான
வெறுமையின் கணம் தாங்காமல்
சுக்குநூறாகி போனது தெரியுமா உனக்கு
அதிரும்படி நீ சாற்றிவிட்டு போனதில்...
ஆணென்றால் இரவில் துணைக்கு
போதை தேடியிருப்பேனோ?
பெண்ணாகிப்போனதாலோ -கண்ணீர்
மட்டும் போதுமென விட்டுவிட்டேன்...
கண்ணீரில் சரிபாதி உனக்கென்றால்
மீதிபாதி உயிர் உடல் கொடுத்து -எனக்கென
எதிர்காலம் பிரமாண்டமாக செதுக்கும்
அவ்விரு தெய்வங்களுக்கு...
கோரிக்கை ஒன்று வைக்கிறேன்
ஊஞ்சலாடும் இதயத்தில் நினைவை
கட்டிவிட்டு சென்றவனே -மறிக்கவோ
மறக்கவோ வலி சொல்லிவிட்டு போ...
உனக்கு பிடித்தமான சொல்லை
நான் பேசாமலிருந்திருக்கலாம்-எனக்கு
பிடிக்காத சொற்கள் உனக்கும் பிடித்தம்
இல்லாமல் போயிருக்கலாம்....
நூலிழையில் ஒன்றென போல்
எண்ணமென மயக்க நிலையின்
உச்சத்தில் உன்னை காதல் முதல்
கணவன் வரை நான் கற்பனைப்பட்டிருக்கலாம்...
மிகவும் தவிப்பான நிலையில்
தறிக்கெட்டு மனம் ஓட...
அறிமுகமில்லாத உணர்வுகளின் தாழ்வாரத்தில்
நான்!! கிறுக்கல்களுடன்!! –புரிகிறதா??
காதல் குறித்த அத்தனை கேள்விக்கும்
என்னிடம் பதில் இருக்கிறதோ?-அது
உன்னிடம் இல்லாமல் போனதோ??
ஈர்ப்பின் விசை அறிதலில் இருக்கிறாயோ நீ??
சொல்லி தீர்க்க முடியாத
எண்ணங்கள் நிலைகொள்ளாமல் பறக்கையில்
உண்மை "நொங்" என்று மண்டையில்
இடிக்கும்போதெல்லாம் சொல்ல இன்னொன்று இருக்கிறது...
"போடா மயிறு" என்று உள்ளிருக்கும்
சாத்தானை எழுப்பி கூற வைக்க முடியவில்லை
ஆனாலும் "போடா **** " - வளமான எதிர்காலம்
எனக்குண்டு!! (வலிகளினூடே)
"பின் குறிப்பு: ஏன் பெண்ணுக்கு காதல் தோல்வியில் வலி மட்டும் தான் வருமா, நொந்து கொள்வது மட்டும் தானா, சிதைந்து போன கற்பனையால் கண்ணீர் மட்டும் தான் வருமா?? கோபமும் வரும்... "
{kunena_discuss:779}