நீங்களே கொடுங்கள் ஒரு தலைப்பு - மது
(Airtel “The boss” ad ஒரு அழகான கதை எழுதத் தூண்டுவதாக தோழி வத்சலா குறிப்பிட்டிருந்தார்கள். அவர்கள் பகிர்ந்து கொண்ட இனிய கருத்து என்னை இந்தக் கவிதை எழுதத் தூண்டியது. தோழி வத்சலாவிற்கு என் மனமார்ந்த நன்றி!!! என்ன தலைப்பு கொடுப்பது என்று யோசிக்கையில்!.... இந்த விளம்பரத்தைத் தோழிகள் பலர் ரசித்ததாக குறிப்பிட்டு இருந்தீர்கள்….நீங்களே ஒரு அழகான தலைப்பு கொடுங்களேன்..)
பகலவனாய் சுட்டெரிப்பாள்.
பால் நிலவாய் தணித்திடுவாள்.
பாலைவனமாய் வாட்டிடுவாள்.
பனிமலராய் இதம் தருவாள்.
வினாடி முள்ளாய் விரட்டிடுவாள்.
யுகம் முழுதும் காத்திருப்பாள்.
மண்டை ஓட்டிற்குள் மூளையாய் ஆட்டுவிப்பாள்.
நெஞ்சுக்கூட்டுக்குள் இதயமாய் துடித்திடுவாள்.
கடுமையைக் காட்டி காயப்படுத்துவாள்.
காதலாகிக் கசிந்துருகி மருந்திடுவாள்.
ஆணை பிறப்பித்து
அலுவல் சிறை வைத்தாள்
அதிகாரியாய்
அதை முறியடிக்க
அவளே முறையீடு செய்தாள்
அன்பு மனைவியாய்
ஆணின்றி பெண்ணுக்கு இல்லை அடையாளம்
அது முடிந்து போன இலையுதிர்காலம்…
அகமும் புறமும் “அவளே” அவன் வாழ்வின் ஆதாரம்
அவர்களை வாழ்த்த வந்தது வசந்தகாலம்!!!