என் சொர்க்கம் - மது
அதிகாலை சுப்ரபாதம் காதில் தேன் பாயும்
வாசலில் மாக்கோலம் மனதிற்கு குதூகலம்
பில்ட்டர் காபி கடைசி சொட்டு வரை சுவைக்கும் இன்பம்
கூகுளில் கூட காணக் கிடைக்காத சிட்டுக்குருவி நாட்டியம்
என்றோ நட்டு வைத்த பவழமல்லி
எனை கண்டு மலர்ந்து சிரித்தது
நானே செய்தேன் என் பிரண்டு பிள்ளையார்
கரைக்கக் கூடாது என்று அடம் பிடித்தேனே
பூஜையில் இருந்து முறைக்கிறார்
பார்க்க வர ஆறு மாதமா கணக்குக் கேட்கிறார்
மல்லிகைப்பூ இட்லி பொங்கல் காரச் சட்னி
முதலிடம் யாருக்கு அதை செய்த கைகளுக்கு
அம்மாவின் மடியில் குட்டித் தூக்கம்
அப்பாவின் கைகள் என் தலையை வருடும்
சொர்க்கத்தில் இருக்கிறேன் இன்று
இக்கணம் இப்படியே நீடிக்காதோ
இன்னும் ஒரு வாரம் மட்டுமே
அடுத்து எத்தனை நாள் காத்திருப்போ
தங்களையே உருக்கி என்னை உருவாக்கிய
தாய் தந்தைக்குப் பெருமை சேர்க்கவே
திரைக்கடல் ஓடி புகழும் பொருளீட்டி
தங்கத் தாம்பாளத்தில் அவர்களை தாங்கி மகிழவே
தூரங்கள் இடங்களுக்கு உண்டு
அன்பு கொண்ட மனங்களுக்கு அன்று
என் பாசமும் அவர்கள் உள்ளம் நிறைந்த ஆசியும்
எங்கும் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ வைக்கும் என்னை!!!
(என்னைப் போல் படிப்பு, வேலை நிமித்தம் தாய் தந்தையை ( சிலர் தாய் மண்ணை ) பிரிந்து தனிமையில் தவமிருக்கும் பிள்ளைகளுக்காக...)