என்னை முழுதும் அறிவாயா?! - ப்ரியா
என்னை உன்னிடம் கொட்டிவிட
துடித்து தொண்டைக்கு எகிறி
சிக்கி கொண்டு கொல்லும்
வாய் விட்டு வெளி வரா வார்த்தைகள்..
கொட்டி விட்டால் தான் என்னவாம்?
கொண்டாட்டம் போட்டு குதித்திடுவேனா?
இல்லை.. நிச்சயமாய் இல்லை..
நடுங்கும் விரல்களின் ஸ்பரிசம்
தீண்டி தாண்டி ஒன்றிரண்டாக
உயிர்ப்பிக்கும் எழுத்துக்கள்
என் அலைபேசி திரையில்
பிரசவித்த உடனே புதைக்கப்படுவதும் ஏன்?
குறுஞ்செய்தி ஒன்றை உனக்கனுப்பி
என் குறைகள் சொன்னதற்கு
மகிழ்ந்திடுவேனோ? இல்லை..!!
அங்கொன்றும் இங்கொன்றும்
சிதறி கிடக்கும் தைரியங்கள் திரட்டி
என் தனிமை விரட்ட போராட்டம்..
ஒரு சிறு அழைப்பில்
என் நிலைமை உனக்குணர்த்தி
எளிமையில் தீர்ந்துவிடுமென
எகத்தாளம் எனக்கு இல்லை..!!
மனக்குமுறல் மறைக்க முடிந்தது
மடிந்த உணர்வுகளை புதைக்க முடிந்தது
ஏன்?எதற்கு? என்று எதுவும் தெரியாமல்
எனக்கு தெரிந்த ஒன்று
என் உணர்வுகளை உன் பற்றி
நான் கண்ட கனவுகளை
நீ அறியாமல் மறைப்பது..!!
மறைத்த அனைத்தையும் நீ அறிவாயா
உன் புகைப்படம் தொட்ட
என் உள்ளத்தின் சுவர்களில்
உன் நிழல் ரேகை அழுத்தமாய்..
என் உயிரில் பாய்ந்த
உன் வார்த்தைகளின் வீரியம்
ரத்தத்தினும் வேகமாய்..
என் நினைவுகள் நினதாகி
முன்னிலும் வினோதமான
முற்றிலும் எனக்கு விரோதமாய்..
மொத்தத்தில் உன் மீதான நேசம்
உன் வருகைக்கான என் மௌனவாசம்
என்றென்றிலும் ஈரமாய்..
என் கண்ணீரின் பாரமாய்..
உன்னிடம் தொலைத்த
என்னை முழுதும் அறிவாயா?
{kunena_discuss:779}