18. காதல் என்பது - ஜான்சி
அவள் முகம் சுணங்குகிறாள்.
அவளுடைய தேவை என்னென்று நான் அறிவேன்.
பிடித்த தின்பண்டங்கள்,
மணக்கும் மலர் வகைகள்,
கனக்கும் நகைகள்,
ஜொலிக்கும் உடை வகைகள்,
வியக்கும் பரிசுப் பொருள்கள்,
பொருள் விளங்கா ஓவியங்கள்,
மயக்கும் வாசனைத் திரவியம்,
களிக்கும் வண்ண அலங்காரம்.
இவற்றுள் எதுவும் அவளுக்கு வேண்டாவாம்.
அவளுடைய தேவை என்னென்று நான் மட்டும் அறிவேன்.
எந்தன் அருகமர்ந்து பேச அவளுக்கு மிகப் பிடிக்கும்.
செல்லச் சண்டைகளில் எனைத் தோற்கடித்து சரணடையச் செய்வது பிடிக்கும்.
ஆயிரங்கள் தன் பையில் வைத்திருந்தாலும் சில 'பத்து'களை என் கையால் செலவிடச் செய்யப் பிடிக்கும்.
வேண்டாம் எனத் தடுத்தாலும் குளிரில் நடுக்கிக் கொண்டு ஐஸ்கிரீம் சாப்பிடப் பிடிக்கும்.
வீட்டை ,அலுவலகத்தை தன் ஒரு கையால் சுழற்றுபவளானாலும்,என்னிடம் மட்டும் செல்லம் கொஞ்சப் பிடிக்கும்.
அவளை அணு அணுவாய் அறிந்திருந்தும் அவளைக் கோபப் படுத்திப் பார்க்க எனக்கு மிக மிகப் பிடிக்கும்.
இதுதான் காதலா!
{kunena_discuss:779}