ஏகாந்தம் - ஜான்சி
சலனமற்ற வெட்டவெளி,
நட்ட நடுவில் ஓர் இருக்கை
இருக்கையில் நான்...
ஓயாமல் பேசிக் களைத்து ஓய்வெடுத்தது போல் அமைதி காக்கும் மரங்கள்.
நீரிலும் சலனமேயில்லை..
விடுமுறைக்கு வெளியூர் சென்றனவோ மீன்கள்(?)
இங்கிதம் தெரியாத உறவினர்போல்,
தொல்லை செய்ய அறியாதிருக்கும் சில்வண்டுகளும், சின்னஞ்சிறு உயிர்களும்.
பேச்சு ஒவ்வொன்றிற்கும் புதிதாய் அர்த்தம் கற்பிக்கும் உறவுகளில்லை,
ஆணையிடும் அதிகாரங்கள் இல்லை.
டிக் டிக்கென ஓடும் கடிகாரத்திற்கு பின்னால் ஓடும் தொல்லை இல்லை.
உள்ளத்தை கூனிக் குறுகச் செய்யும் குற்றம் சாட்டல்கள் இல்லை.
நீயா? நானா? யார் பெரியவன் எனும் போட்டி பொறாமை இல்லை.
மூச்சடைக்கும் மனித மனக் குப்பைகளிலிருந்து தப்பிக்க......
எப்போதாவது தேவையாகத் தான் இருக்கிறது
இப்படி ஒரு ஏகாந்தம்.
இந்த படம் தான் இந்த கவிதை எழுத தூண்டுதல் கொடுத்தது.
{kunena_discuss:779}