அவளின் டைரியில்… - மீரா ராம்
10. அசையக்கூட மறுக்கும் போதும்...
இருள் போர்வையைப் போர்த்திக்கொண்டு நகருகிறது வானம்…
அதிகாலை விடியலை நோக்கி – அமைதியாய்…
உறங்கும் வேளையில் மட்டும் நிசப்தம் தரும் இறைவா…
வாழ்வு முழுமைக்கும் இந்த நிசப்தத்தை பரிசளியேன்…
ஒரே இரவில் தூக்கத்தோடு என் உயிரும் சென்றுவிடுமல்லவா…
நிதமும் இப்படி சித்ரவதை அனுபவிக்க மாட்டேனே…
என்னை நினைக்கவோ, என்னைப் பற்றி பேசவோ
விரும்பவில்லை அவன் துளியளவு கூட… ஆனால்…
அவனை மனதிலும் எண்ணத்திலும் சுமக்கிறேன்
24 மணி நேரமும் போதாது என்பது போல…
இப்படியும் ஒரு வாழ்க்கையா எனக்கு???...
நொந்து போய் கடவுளின் மேல் பழி போட துடிக்கும் நான்
உன்னை நொந்து கொள்ளாமல் போகும் மாயம் என்ன???...
இது தான் காதலா?... இது தான் நேசமா??...
கண்ணாடி உடைந்து காலில் குத்தி குருதி வெளிவந்தபோதும்
உடைந்த கண்ணாடியின் அபசகுணம் உன்னைத்
தொற்றிக்கொள்ளக் கூடாதென்று பதருகிறதே இதயம்…
என் வலியையும் வழியும் இரத்தத்தையும் பொருட்படுத்தாமல்…
காதலித்தால் உள்ளம் ஒன்றாகி விடும் மாயம் இதுதானா?...
எனில் இது ஒருதலைக்காதல் என்பதால் தானோ
என் இதயம் பதறி துடித்து தவிக்கிறது
உன் மேல் கொண்ட காதலால்… நேசத்தால்…
உன் இதயம் எனக்காக அசையக்கூட மறுக்கும் போதும்…
{kunena_discuss:784}