அவளின் டைரியில் - மீரா ராம்
28.எப்பேர்ப்பட்ட இடத்தில் நீ என்னை வைத்திருக்கிறாய்???
என் இரவுகளில் நீங்காத ஒன்றாய் அழுகை…
சத்தம் போடாது கதறி கண்ணீர் விட்டேன் வெகுநேரம்…
உன் எண்ணத்திலே நான் உழன்று போகும் கதை என்ன???
என் கன்னத்திலே நீர்த்துளி வழிந்தோடும் நிலை என்ன???
ராத்திரி நேரக் கனவுகளின் ரகசிய நாயகனே…
ஏன் என்னுள் நுழைந்து சிம்மாசனமிட்டாய்???
இறக்கும் மார்க்கம் தெரியும் எனக்கு – உனை
மறக்கும் மார்க்கம் தெரியாது போகும் உண்மை என்ன???
உன்னிடத்தில் மனதை தொலைத்தது போல்
பாரதியின் கவிதையிலும் மனதை பறிகொடுத்தேன் இன்று…
எனக்கென்றே அந்த பாடல் எழுதியது போல்
நெஞ்சு விம்மி புடைத்து அரற்றியதே…
காதலனாய் என்னை புறக்கணித்தாய்… - விதியென்று விலகினேன்…
நண்பனாய் என்னை ஒதுக்கினாய்… - வலியெடுத்தும் மௌனித்தேன்…
முகம் தெரிந்தவனாய் என்னை வெறுத்தாய்… - பொறுத்துக்கொண்டேன்…
ஒவ்வொரு முறையும் சாட்டையால் “சுளீர்” என்ற சத்தத்துடன்
இதயத்தில் அடி வாங்கினேன் உன் விலகலினால்…
மூன்றாம் மனிதராக கூட என்னை நீ நினைக்க
விரும்பாது போவாய் என கனவிலும் நினைக்கவில்லை…
விதி வலியது என்பது உண்மைதானோ???
“மூன்றாம் மனுஷி”, “முன்பின் தெரியாதவள்”
இந்தப் பட்டம் கூட நீ எனக்குத் தர தயாரில்லை எனில்,
எப்பேர்ப்பட்ட இடத்தில் நீ என்னை வைத்திருக்கிறாய்???...
{kunena_discuss:784}