கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 23 - உன்னிடத்தில் வீழ்ந்து போவதேன்?….!!!… - மீரா ராம்
தரையில் பட்டதும் சிணுங்கிடும்
கண்ணாடி வளையல்களாய் மனம்
தத்தளித்து தவிக்கிறது உன்னை எண்ணுகையில்…
ஆயிரம் அதிர்வுகள் அதிர்ந்து கடைசியில்
அமைதி அடையும் வளையல்களாய் நானும்
உன் நினைவுகளின் தாக்கத்திற்குள் ஆட்பட்டு
இறுதியில் ஆழ்கடலை போல் மௌனமும் காக்கிறேன்…
சளைக்காமல், அலுக்காமல் உன்னிலேயே
கரைந்து போக துடிக்கிறேன் அணுதினமும்..
ஏன்?... எதற்காக?... ஏனிந்த மாற்றம் என்னில்?...
எத்தனை தடவை கேட்டபோதிலும்
ஏனோ விடையை நான் நெருங்க முடிவதே இல்லை…
மாயக்கண்ணனாக மனதில் நீங்காத இடம் பிடித்த கேசவா…
பிள்ளை போல் உன்னை அள்ளிக்கொள்ள நினைத்திடும்
உள்ளத்தை நான் என் செய்வேன்?...
அழகு கொஞ்சும் முகத்தினை ரசித்திடுவேனா?...
இல்லை அதில் கரைந்து காணாமல் போய்விடுவேனா?...
கன்னம் பிடித்து கொஞ்சிட விழையும் கரத்தினையும்
திண்ணமாய் தடுத்திடும் நானும் என்னில் இல்லவே இல்லையே…
அமுதம் சிந்தும் இதழ்களை பார்க்கையில்
எங்கிருந்து தான் பூக்குமோ புன்னகைப்பூக்களும் எனக்குள்?...
சின்னஞ்சிறுவனாக உன்னை நான் எண்ணி எண்ணி ரசித்திடுகையில்
வளர்ந்த பிள்ளையாக நீ என்னை நாணவும் வைத்திடுகிறாயேடா…
ஆறடி உயரம் நீ இருந்த போதும்,
நடக்கையில் என் விரல்பிடித்து உலாவரும் வேளை
பச்சிளங்குழந்தையாகவே தெரிகிறாயே ஏனடா?...
ஆசை வைத்த என்னை காக்கவைப்பதில் என்ன சுகமடா?
மீசை வைத்த என் அழகு செல்லக்கண்ணா…
பச்சரிசி பல்வரிசை காட்டி நீயும் சிரிக்கையில்
மொத்தமாய் நானும் உன்னிடத்தில் வீழ்ந்து போவதேன்?... என் ராஜா!!!!...
பூ மலரும்……….
{kunena_discuss:1088}