கண்ணீர் எதற்கு? - புவனேஸ்வரி
என்னை அழாமல் பார்த்து கொள்வது என் அன்னையின் இலட்சியம்
இருந்தும் நான் பசியில் அழுதிருக்கிறேன் !
தீ சுடும் என்று பல எச்சரிக்கைகளை கேட்டதுண்டு
இருந்தும் மத்தாப்பு விளையாடி இருக்கிறேன் !
மழையில் நனைந்து காய்ச்சலில் விழுந்தது உண்டு
இருந்தும் மழைத்துளிகளை அள்ளி கொள்கிறேன் !
விரைவாய் ஓடும்போது தடுக்கி விழலாம் என்று தெரியும்
இருந்தும் தலைதெறிக்க ஓடுகிறேன் !
தொலைத்துவிடுவேன் என்று தெரியும்தான்
இருந்தாலும் அடம்பிடித்து சிறுவயதில் கம்மல் மாட்டிக்கொண்டதுண்டு !
பொய் உரைப்பது தவறு என்று தெரியும்தான்
இருந்தாலும் நிறைய பொய் உரைத்திருக்கிறேன்!
என்றோ ஒருநாள் பிரியாவிடை கொடுப்பேன் என்று தெரியும்
இருந்தும் உறவுகளை வலுப்படுத்தி கொள்கிறேன் !
என்றோ இறந்து விடுவேன் என்று தெரியும்
இருந்தும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன் !
வாழ்க்கையில் சில நிகழ்வுகளை நம்மால் தடுக்கவே முடியாது.. நம் எண்ணங்களையும் மீறி இயல்பு என்ற ஒன்றை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நம் மனதிற்கு இதமாக இல்லாவிடினும் சில சூழ்நிலைகளை சந்தித்துதான் ஆக வேண்டும்.. எனில், தவிர்க்க முடியாத காரியம் துன்பத்தை அளிப்பதாய் இருந்தாலுமே அதை புன்னகையுடன் ஏற்றுகொள்வோமே.. கண்ணீரால் ஒரு சூழ்நிலையை மாற்ற முடியாது என்றால் அந்த கண்ணீர் எதற்கு ?
{kunena_discuss:779}