என் ராஜகுமாரி - புவனேஸ்வரி
மடியில் உறங்கி கொண்டிருந்த கணவனின் முகம் பார்த்தேன்
எத்தனை நிம்மதியான உறக்கம் ?
திருமணத்திற்கு முன்பும் பின்னும்
ஆணுக்கு மட்டுமே கிடைத்த வரம் சுதந்திரம்
பெருமூச்சுடன் நினைவு பெட்டகத்தை திறந்தேன் !
திருமணத்திற்கு முன் எங்கள் வீட்டின் இளவரசி
முடிசூடா ராஜகுமாரி நான் !
அதிகாலை என்பதே எனக்கு
அன்னையின் செல்லமான கோபக்குரல் ஒலிக்கும்போதுதான் !
அதுவும் தந்தையை சாக்கு காட்டி
மிரட்டி எழுப்பிடும் தாயிடம் தினமும் லூட்டி !
பல்துலக்கும் முன்பே அம்மாவின் தயவில் காபி
தம்பிக்கு வைத்ததையும் திருடிக் குடிப்பதில் தனி ருசி !
மங்களகரமாய் குளித்து தோற்றமளிக்கும் அம்மாவுக்கு
கன்னத்தில் சுடச்சுட என் காலை முத்தங்கள் !
சீ போடி என்று சிணுங்கி கோபபட்டாலும்
எத்தனைமுறை அதை மனதிற்குள் சேர்த்து வைத்தாயோ !
அம்மா , உன் கன்னங்கள் இப்பொழுதெல்லாம்
என் முத்தங்களை தேடுகின்றனவா ?
குளித்து முடித்தவுடன் தந்தையின் தட்டிலிருந்து இட்லி ஒரு வாய்
தம்பியின் தட்டில் இருந்து ஒரு பூரி கடன் !
அம்மாவின் சேலை முந்தானையில்
ஈர கரங்களை துடைத்துவிட்டு உணவுடன் தொடங்கும் போராட்டம்!
பிடித்ததை எல்லாம் வாங்கி தரும்படி தந்தையிடம் கொஞ்சல்
அறிவுரை கூறும் அன்னையிடமோ விழிகளை சுருக்கி கெஞ்சல் !
சண்டைபோடும் தம்பியுடன் அடிதடி
நான் கண்விழித்துவிட்டாலே வீடெங்கும் கேட்கும் சரவெடி !
கத்தியை விட என் கண்ணீரே வீட்டில் கூர்மையான ஆயுதம்
பஞ்சுமெத்தையை விட என் தந்தையின் மடிதான் எனக்கு உறைவிடம் !
என் செல்லப்பிராணி கூட எனக்கே தரும் முன்னுரிமை
எங்கெங்கும் எடுபடும் பெண்ணிவளின் பேச்சுரிமை !
இன்றோ, அலாரத்தை மௌனமாக்க அதிகாலையில் கண்விழிக்கும் நான்
சுப்ரபாதத்தை உயிர்பித்துவிட்டு ஜன்னல் வழியே தொலைந்துபோன சுதந்திரத்தை தேடுவேன் !
எனக்காக காபி குடிப்பதை மறந்து
வீட்டில் உள்ளவர்கள் தேவைகேற்ப பம்பரமாய் சுழலும் என் கைகள் !
கொண்டுவரும் காபியை குடித்துமுடிப்பதற்குள்
செல்லமாய் கொஞ்சிடும் என் கணவன்
எனக்கு கிடைக்கும் அன்றாட ஆறுதல் பரிசு அது !
மனதிற்குள் மெச்சுவாரோ என்னவோ
மௌனமாகவே என்னை கண்காணிக்கும் அத்தை
என்றாவது அதிசயமாய் நீ சாப்பிட்டியா ? என்று கேட்கும்போது
பெற்றிடுவேன் இரண்டாம் ஆறுதல் பரிசு !
காலையுணவு பரிமாறும் வேளை,
எனக்கு பிடித்த உணவுகளை நினைவுகூர்ந்து கொண்டே
தட்டில் வைப்பேன் கொஞ்சமும் பிடிக்காத உப்புமா
அதையும் ரகசியமாய் கணவன் ஊட்டிடும்போது
கிடைத்திடுமே எனக்கு மூன்றாவது ஆறுதல் பரிசு !
வரேன் அண்ணி என்பார் கணவனின் தம்பி
என்னிடம் சண்டை பிடிக்கும் தன் சகோதரனின் பிம்பம் நினைவில் !
காதலுடன் கணவன் பார்க்கையில்,
ஒரு கணம் சுதந்திர வானில் நான் !
அதற்குள் தடுத்திடும் அத்தையின் குரல்
இன்னைக்கு என்ன சமையல் என்றவாறே
ஏனோ அன்னையின் ஞாபகம் வரும்
அவரும் இப்படித்தான் கேட்பார் எனக்காக சமைத்திட !
என் வீட்டில் ஆயுதமான கண்ணீருக்கு இங்கு நீலிக் கண்ணீர்
என பெயர் வருமோ என்ற அச்சம் !
வராத கண்ணீரை வரவழைத்து அடம்பிடித்தவள் ,
வரும் கண்ணீரை கூட கண்சிமிட்டி மறைக்க கற்றுக்கொண்டேன் !
ஆனால் இன்று கண்ணீர் இல்லை
காரணம் எனக்குள் துளிர் விட்ட எங்களுயிர்!
இறைவனிடம் வரம் கேட்கிறேன்
எனக்கொரு மகள் வேண்டும் !
நான் ஏங்கும் சுதந்திரத்தை
அவளுக்கு நான் தரவேண்டும் !
என் இம்சைகளில் அன்னை கண்ட சுகத்தை
இன்று நான் அனுபவிப்பதற்காக
பிறந்து வரட்டும் என் ராஜகுமாரி !
திருமண பந்தம் மிக அழகானது என்பதில் எனக்கும் மாற்று கருத்து இல்லை .. எனினும் இப்படியும் ஓர் உணர்வில் இருக்கும் சகோதரிகளுக்கு என் கவிதை அர்ப்பணம்
{kunena_discuss:779}