அர்ஜுனனின் சுபத்திரையாய் நான் - புவனேஸ்வரி
நேசம் கொண்டவள் நான்
உன் பாசமோ என் தமையனிடம் !
காத்திருந்தவளோ நான்
நீ பயணம் கொள்வதோ மாதவனை தேடி!
இரவு முழுவதும் தூங்காமல் இருப்பதோ நான்
நீ ரசிப்பதோ வெண்ணிலவை !
விரகதாபத்தில் இருப்பது நான்
நீ குளிர்காய்வதோ விறகுதீயில் !
காத்திருந்து பேசத் துடிப்பதோ நம்மைப்பற்றி
நீயோ செலுத்தும் கவனம் எல்லாம் நம்மைசுற்றி !
என் கரங்களை உன்னோடு கோர்க்க காத்திருந்தால்
நீயோ வில்லுடனும் நானுடனும் கை கோர்கிறாய்.. !
நேசம் பேசிடும் மொழியாய் பார்வையில் பேசினேன்
நீ கண்ணியம் என்ற பெயரில் பெண்ணிவளை ஏங்க வைக்கிறாய்!
சின்னச் சின்ன சீண்டல்களில் உன்னை நெருங்கி வருகிறேன்
நீயோ என்னை சிறுமிபோல் பார்க்கிறாய்!
அப்படியென்னதான் பந்தமோ
என் தமையனுடன் உனக்கு!
பெற்றோரின் அன்பை பகிர்ந்தபோது கூட
எழாத பொறாமை உணர்வு !
உனதன்பை பெறுவதற்காக
என் இதயத்தில் வியாபிக்கிறதே !
சுபத்திரை நான் கிருஷ்ணனாய் மாறவேண்டும்
அர்ஜுனன், உனது முழுநேசத்தை அனுபவிக்க !
விஜய் டிவி மகாபாரதத் தொடரில் என் மனம் கவர்ந்த அத்தியாயம் எண் 67.. சுபத்திரையை விட்டு பார்வையை விலக்க முடியாத காட்சிகள் .. அர்ஜுனனின் பெயர் கேட்டதுமே முகம் விகாசிப்பதும், அர்ஜுனனை விளையாட்டாய் சீண்டுவதும், அன்பு ததும்ப பேச முனைகையில் அர்ஜுனனின் கவனம் கிருஷ்ணன் மீது மட்டுமே இருக்கிறது என்பதை அறிவதும், அதனால் மனம் சிணுங்கி கண்ணீர் விடுவதும் மனதில் பசுமரத்தாணியாய் பதிந்த காட்சிகள் .. சுபத்ராவின் நிலையில் சில நொடிகள் வாழ்ந்து விட்டது போல ஓர் உணர்வு .. அந்த காட்சியை மையமாய் கொண்டு எழுதிய கவிதையிது உங்கள் பார்வைக்கு
{kunena_discuss:779}