பூக்களே சற்று ஓய்வெடுங்கள்! - புவனேஸ்வரி
திருமண நாள்
எண்ணி சிலிர்த்த நொடிகளும்
கன்னி முகம் சிவந்த நொடிகளும்
கண்ணின் முன் நிற்க
வாசல் நோக்கி காத்திருந்தாள் சகி ..
எங்கே என்னவன் ?
என் மனம் காக்கும் மன்னவன் ?
கடமை என்று வந்துவிட்டால்
அவன் உடமை என்னை மறந்திடும் கள்வனவன் !
நேரம் ஆகிட நெஞ்சில்
பாரம் கூடுவதேன் ?
கலங்காத விழிகளும்
கண்ணீரில் நனைவதேன் ?
இன்றும் அவன் வரவில்லையா ?என் வாசலில்
அவனின் வரவென்பதெ இல்லையா ?
ஓடி சென்றாள் தோட்டத்திற்கு
அதுவே தீர்வு அவளின் மனவாட்டதிற்கு
வாடிய விழிகொண்டவள்
வாடா மல்லி பறித்து சரம் தொடுத்தாள் ..
தொடுத்த சரமெல்லாம்
அவளின் பெருமூச்சில் சருகாகிட
நாட்டை காக்க சென்ற கணவன்
இன்றும் வீட்டிற்கு வரவில்லை என்றுணர்ந்து
பூக்களிடம் பேசுகிறாள்
அஞ்சா நெஞ்சம் கொண்ட என்னவன்
அரும்பாடு படுகிறானோ ?
தேக்கு போன்ற வலுகொண்ட தேகமுடையோன்
எனைபோலவே ஏக்கத்தில் வாடுவானோ ?
சீற்றம் வந்தால் சீறிடும் சிங்கமவனின்
அங்கத்தில் காயங்களும் உருவாகிட பொறுப்பேனோ ..
இன்றும் என்னவன் வரவில்லை
பூக்களே சற்று ஓய்வெடுங்கள் !
{kunena_discuss:779}