வாட்ஸ் அப் உறவுகள் - புவனேஸ்வரி
"ஆன்லைனில் உன் பெயர் !!"
வராத மழை சென்னை வந்தது போல்
மலராத பாலை இன்று மலர்ந்தது போல்
உள்ளுக்குள் புதுவித பரவசம்
உன்னிடம் பேசிட ஏங்கி முகத்திலும் நவரசம்
வெள்ளை காகிதத்தில் கரும்புள்ளியை உற்றிநோக்கி
மனதில் இருப்பதை சிதறவிடும் பித்து பிடித்தவன் போலவே
உன் பெயரை பார்த்ததும் கவனம் மொத்தத்தையும் திரையில் நிறுத்தி
சிதறுகின்றேன் புன்னகையை
யாரங்கே ,
என் முகம் காட்டும் அபிநயங்களை அவளுக்கு உடனே அனுப்பி வையுங்கள்!
யாரங்கே,
என்னை லூசு என்று திட்டும் அவள் இதழில் புன்னகை இருக்கிறதா என்று கண்டு வாருங்கள் !
"" டைப்பிங் ""
மருத்துவன் எங்கே ?
என் இதயம் துடிக்கும் வேகத்தை கண்டறிய இதயமாணியை கொண்டு வாருங்கள் !
செல்போனே,உனக்கு கைகள் இருந்தால் நடுங்கும் என் விரல்கள்
உன்னை நழுவாமல் பிடிப்பதற்காக இறுக பற்றிக்கொள்
ஒரு நொடிக்குள் ஓராயிரம் நிமிடங்கள் ஒளிந்துள்ளன என்பதே,
உன் பதிலுக்காய் காத்திருக்கும்போதுதான் உணர்ந்தேன்
"சரி " என்று ஒற்றை வார்த்தை அனுப்பிவிட்டு நீ சென்று விட்டாய்
நான் இன்னமும் அதட்டி கொண்டிருக்கிறேன் தறிக்கெட்டு ஓடும் என் மனதை !
{kunena_discuss:779}