என்னோடு போகட்டும் ! - புவனேஸ்வரி
இனிப்பு கசப்பு
உவர்ப்பு துவர்ப்பு
காரம் புளிப்பு
எந்த சுவையையும் அறியவில்லை நான் !
இரவு பகல்
மாலை மதியம்
எந்த காலமும் கண்டுக்கொள்ளவில்லை நான் !
மழை வெயில்
குளிர் வெப்பம்
எந்த நிலையையும் உணரவில்லை நான் !
சுற்றும் பூமி
சுழலும் காற்றாடி
துடிக்கும் இதயம்
ஓடும் காலம்
எதைக் கண்டும் நகரவில்லை நான் !
உணர்வெல்லாம் மறுத்துப்போய்விட
எங்கே விட்டுச் சென்றாயோ அங்கேயே
அசையாதிருக்கிறேன்..!
காரணம் அறிந்திருந்தாலாவது
அடுத்த காரியத்தை தேடி இருப்பேன்
நீ சொல்லாமல் போய்விட்டாய்
நான் காரணத்தை தேடி அலைகிறேன் !
இதயம் வெடித்தும் இம்மியளவும் நகர்வில்லை
எங்கெல்லாம் தவறிழைத்திருப்பேன் என்று
அலசி ஆராய்கிறேன்..!
உன்னை சந்தித்த நாட்களை எல்லாம் அசைப்போடுகிறேன்..
இப்பிறவி முடிவதற்குள் கண்டுப்பிடித்துவிடுவேன் காரணத்தை!
ஆனால் உன்னை ?
எங்கு தொலைத்தேன் என்று தெரியாமல்
எவ்விடம் தேடுவேன் உன்னை ?
சலிப்பு தட்டிவிட்டது எனக்கு
உன்மீதல்ல, என் மீதுதான் !
நீ எட்டி உதைக்கிறாய் என்று அறிந்தும்
கடல் அலையாய் மாறி உன் பாதத்தில் யாசிக்கிறேன்.!
போதும், என் எதிர்ப்பார்ப்புகளுக்கு நீ பலியாகிட வேண்டாம்.!
வலியோ வரமோ அது என்னோடு போகட்டும்!
{kunena_discuss:779}