02.இது பேய்க் காதல் - புவனேஸ்வரி
வெட்கம் கெட்ட வானே,
இரவாகினால் காதல் மழையோ?
உன் சங்கமம், எனக்குள் சுமையாவதை அறிவாயோ?
அறிந்தால் கொஞ்சம் ஓய்வாயோ?
பிடிவாதமாய் காதலிக்கும் வானிடம்
வாதம் தொடங்கினான் தெய்வீகன்!
நட்டநடு இரவில்,
எட்டு வைத்து நடந்தவனை
தொட்டு தொட்டு இம்சித்தது இனிமை
அதை தாங்காமல் தவித்தது இளமை!
அகிலமே காதலில் அடக்கம்
என் மனதில் மட்டும் நிலநடுக்கம்
உடன் இருக்க வேண்டியவளோ
உல்லாசமாய் சொர்க்கம் சேர்ந்துவிட்டாள்!
சொல்லி இருக்க வேண்டும்!
அவள் வாழ்ந்த போதே என் காதலை
சொல்லி இருக்க வேண்டும்!
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்
இனி என் விதிக்கு இல்லையே பரிகாரம்!
“தூயவிழி”
உச்சரித்தான் அவள் பெயரை,
பெயருக்கு வலித்திருக்குமோ?
நிச்சயம் இல்லை!
வலித்தாலுமே அது, இவன் வலிக்கு ஈடாகுமோ?
வான்மழையின் முத்தங்களில் கரைந்தது
அவன் கண்ணீர்.. அவனும் கரைந்திருக்க வேண்டும்!!
ஏன் டீ விட்டுட்டு போன?
உதடுகள் கேட்கும் அதே கேள்வி
கேட்கும்போதெல்லாம் உள்ளத்தில் வேள்வி!
கேட்டவன் துவண்டுவிட்டான்
பதில் சொல்ல வேண்டியவள் மாண்டுவிட்டாள்!
இயற்கையை காதலும் வென்றிடுமோ?
அவன் ஈர விழியில் ஒளி வருமோ?
வந்தது பேரொளி,
நண்பனின் கார் அது !
“ டேய் வா வீட்டுல விடுறேன்”
இலக்கில்லாமல் நடந்தவனுக்கு
இலக்குவன் போல துணை நின்றான் தோழன்.
சேர்ந்திருந்தான் தன் வீட்டில்
வழக்கம்போல மௌனக்கூட்டில்!
தோள் கொடுத்த நண்பனும்
தோள் குலுக்கி சென்றுவிட்டான்..
காதல் போனதுமே நட்பு வந்ததே
நட்பு போனதும் காதல் வந்திடுமோ?
இனி எங்கு வரப்போகிறது?
சிரித்தான் விரக்தியாய்!
தேடிபிடித்த கைப்பேசியில் நண்பனை அழைத்தான்..
“மச்சி, தேங்க்ஸ்டா வீட்டுல விட்டதுக்கு”
நன்றியுணர்வு அவனிடம்,
நடுக்கமோ நண்பனிடம் !
“ லூசாடா நீ ? மணி 2 .. தூங்கிட்டு இருக்குறவனை எழுப்பாதே !”
கண்டிப்புடன், துண்டித்தான் ஃபோனை !
எனில், வந்தது யாரோ?
தொடரும்
{kunena_discuss:1072}