புறப்படு பெண்ணே, சிகரத்தை நோக்கி - ஜெனிட்டா
முக்காடிட்டு எல்லைக் கோடுமிட்டு
முடங்கிக் கிடந்த காலம் மூடப்பட்டது
முனைவர் பட்டமும் பெற்று பாடம் பயிற்றிட
பாரினில் வா பாரதியின் புதுமை பெண்ணே!
செக்கு மாட்டுத் தனமான
செயற்கடங்கா காரியம் செய்த
சேனைதனை வெல்ல,
செருக்குற்றோர் வீழ,
சீர்பெற்ற பெண்ணாய்
சிறப்போங்க பெண்ணே வா!
கல்வி வேண்டாமென
கரைதாண்டா வண்ணம்
கதவுதனை அடைத்து
நெஞ்சில் கனல் வேக
அடுப்பூதவைத்த பூதங்களை வெல்ல
எரிதணலாய் மாறி,
ஏவுகணையாய் பறக்க,
ஏற்றம் புரிய வா பெண்ணே!
"பொம்பிளை சிரிச்சாபோச்சு
புகையில்லை விரிச்சாபோச்சு"-என்று
பழங்காகிதமென புழங்கிய
பழமொழிதனை உடைத்து
பாரெங்கும் உன் பாதம் படர
வெற்றிச் சிரிப்பலைகள் சிதற
சிறப்புடன் புறப்படு பெண்ணே சிகரத்தைநோக்கி!
கற்றார்க்கும் கல்லார்க்கும் காரியதரிசியாய்...
உற்றார்க்கும் உடையார்க்கும் உரிமைப் போரொளியாய்...
நெஞ்சில் ஊனமுற்ற மாந்தர் ஊக்கம்பெற்றிட,
உயர்வின் மகுடமாய் முடிசூட பெண்ணே வா !
அல்லல்கள் அகற்றி
இன்னல்கள் உடைத்து
அகிலத்தவர் நல் ஆட்சி காண
ஆண்டாண்டு அணி செய்யும்
ஆணுக்கும் நிகராகி,
சபைதனில் சினமில்லா
சான்றோர் சொற் கேட்டு
சாதிச் சாவியினை உடைத்து,
அடிமைச் சங்கிலியினை அறுத்து,
யாதும் ஊருக்கும் யாவுமாய்
யாக்கை சோர்வினைச் சாராமல்,
புறப்படு பெண்ணே-இத் தரணியை ஆள...
பாரதிச் சிந்தைகள் செம்மையென்று-அவன்
எண்ணங்கள் பொய்ப்பதில்லையென்று
அவன் தாசனின் மொழிகள் ஏற்று
ஆசனாய் அவனையும் கொண்டு
அவனியில் அருஞ்செயல்கள்ஆற்ற
புறப்படுபெண்ணே, சிகரத்தைநோக்கி!