தாயே வணக்கம் - தங்கமணி சுவாமினாதன்
ஆதவன் மறையும் நேரம்-ஆற்றங்கரையின் ஓரம்..
அமர்ந்தேன் சிறிது நேரம்-மேனிவருடும் தென்றல்..
சலசலக்கும் தண்ணீர்-மலரும் மல்லிகை வாசம்..
கூட்டினுள் பறவைகள் கூச்சல்-மெல்ல எழுந்தது நிலவு..
என் விழிகள் தாமாய் மூட-இமைக்குள் விரிந்தது காட்சி..
காட்சியில் சாட்சியாய் நிலவு-அதன் ஒளியில் தெரிந்தாள்-
ஓர் பெண்..
அடடா எத்தனை அழகு-பார்த்ததும் காதல் நெஞ்சைப்பற்ற
மெல்லச்சிரித்தேன் -அழகிடம் தோற்றேன்..
நிலவைப்பார்த்துக்கேட்டேன்..என்னருமைக்காதலிக்கு வென்ணிலாவே
நீ இளையவளா?மூத்தவளா?சிரித்தது நிலவுப்பந்து..நின்றது மௌனம்-
காத்து..
நேராய்ப் பார்த்துக்கேட்டேன்..பெண்ணே நீ யார்?என்றேன்..
நான் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியவள்-
பகன்றாள் அந்தப் பாவை..
பதினாறாய் நினைத்தேன் பல நூறு சொல்கிறாளே..புதிராய்ச் சொன்னவளைப்
புரியாமல் பார்த்தேன்..
புரியவில்லையா உனக்கு?என்னைத் தமிழ் என்பது வழக்கு..
நானே செந்தமிழ்,பைந்தமிழ்,கன்னித்தமிழ்..உன் தாய் மொழி..
என்றாள் அந்தத் தேன் மொழி..
ஓ..தமிழ்த் தாயே நீயா வந்தாய் என் மூடிய இமைக்குள்?
தாயே..வணக்கம்..கைகளைக் கூப்பினேன்..கண்கள் திறந்தன-
காட்சி மறைந்தது...
வாழ்க்கைக்குத் தேவை தமிழா?ஆங்கிலமா?காலையில் நடந்த-
பட்டி மன்றத்தில் கலந்து கொண்டதின் தாக்கமோ இது...