வாழ்க்கை... - தங்கமணி சுவாமினாதன்
ஓ மானிடா...
வாழ்க்கை என்பது வானில் தோன்றும்....
வானவில் போன்றது..
சட்டெனத் தோன்றி சடுதியில் மறைவது..
வாழ்க்கை என்பது வற்றாது ஓடும்....
நதிபோல் அல்ல...
மின்னலாய்த் தோன்றி நொடியில் மறைவது..
வாழ்க்கை என்பது தாயிடம் தோன்றி..
காலன் அழைக்கக் காணாமல் போவது..
இதற்கிடையேதான் எத்தனை.. எத்தனை..
வேஷங்கள்..துவேஷங்கள்..
பிறக்கும் அனைவர்க்கும் அவரவர்க்கோர்
முகமுண்டு..
ஆயினும் ஏ..மானிடா..நீ முகமூடி அணிவதேன்..?
பாசம் காட்டுவதாய் "வேஷம்" போடுகின்றாய்..
உண்மை சொல்லுவதாய் "பொய்மையே" பேசுகின்றாய்..
நம்பி வந்தவரை "நாசம்" செய்கின்றாய்..
வணிகம் செய்வதிலும் "மோசடி" செய்கிறாய்..
உதவி செய்திடவும் "லஞ்சம்" கேட்கின்றாய்..
உறவுகளிடையேயும் "பகைமை"காட்டுகின்றாய்..
காதல் மொழி பேசி பின்"துரோகம்"செய்கின்றாய்..
பெற்ற பிள்ளையையும் சில "நூறுக்கு"விற்கின்றாய்..
அரசியல் பிழை செய்து "ஆதாயம்" பெறுகின்றாய்..
ஆடாத ஆட்டமெல்லாம்"ஆடித்தான்"பார்க்கின்றாய்..
நிலையற்ற வாழ்க்கையில்-நீ ஏன்
நாடகம் போடுகின்றாய்...?
ஆறடி மண்ணுக்குள் அடங்குவாய்..
தெரிந்திருந்தும் திருந்த மறுத்து ஏன்..
தினம் தினம் நடிக்கின்றாய்..?
ஏ..மானிடா..வாழ்க்கை ஓர் முறைதான்..
நாளைய தலைமுறைகள்" நல்லதாய்" உனைப் பேச..
இன்று நீ கொஞ்சம் "மனிதனாய்"வாழ்ந்து பாரேன்.
{kunena_discuss:779}