அவனன்றி . . . - ராஜலக்ஷ்மி
நாவறட்டும் தாகத்தை போன்றது
உன்னை காண விழைந்திடும்
என் தவிப்பு . . .
கைகெட்டா கீழ்வானம் போல்
முடிவில்லா துன்பத்தில் உழன்று
வெந்து தணிந்து
உறக்கமில்லா இரவுகள் பல கடந்து
இரக்கமில்லாதோர் பால்
இரந்து வாழும் நிலை கொண்டு
இதயத்தின் நரம்புகள் அறுபடும்
துயரினில் இறுகி
காய்ப்பு காய்ச்சி கிடந்தன என் உணர்வுகள்!
பாலைவத்தின் சோலை போலவே
எனக்கு உன் அறிமுகம். . .
பகடி பல புரிந்தாய்
கண நேரம் எனை பிரியாய்
கனவுகள் பல தந்தாய் - என்
கவிதைகளின் கரு ஆனாய். . .
மெல்ல மெல்ல ஊடுருவி
மயிலிறகால் வருடினாய் இதயத்தை
பளிச்சிடும் மின்னல் - மேகக்
களங்கத்தை களைந்திடும் - எனை
பற்பலவாய் உருமாற்றி
புதுப்பிறவியும் நீயே தந்தாய்...
பின்னிரவும் முற்பகலும் சங்கமிக்கும்
ஓர் பொழுதில்
என்னவளே! இனி எல்லாம் நீயே என்றாய். . .
காதல் கணவா! என் கரம் பிடித்தாய் நீ. . .
உன் உள்ளங்கை கதகதப்பில் - என்
ஆயுளை நான் கழிப்பேன்
மெல்லிய தென்றலையும் எதிர்கொள்ளவொன்னா
சிறு மலராய் மாறிவிட்டேன்
கடும் சூறாவளியையும் எதிர்கொள்ளலாம்
நம் பயணம் . . .
பற்றிய கரம் விட்டுவிடாதே
ஒரு பொழுதும் . . .
அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பர். . .
நீயின்றி ஓர் அணுவும் அசையாது என்னுள் . . .