கவிதை - பட்டுப்போனவள் - ராஜலக்ஷ்மி
பட்டுப்போன பின்பும் - உனை
விட்டுப் போக மனமில்லை
காய்ந்து போன பின்பும் - உனை
ஆய்ந்து போட மனமில்லை ...
என்றேனும் ஒரு நாள் - உன்
துளிர்க் கரம் நீட்டுவாய் . . .
மண் மீது தான் கொண்ட
மனக் கசப்புகளை மறந்து
இறுகப் பற்றிக் கொள்வாய்
இசைந்து உன் வேர்க்கால்களால். . .
சூரியக் காதலன் - தன்
கூரிய கரங்களால் உனைத்
தொட்டுத் தீண்டிடுவான்
சுவாசிக்க மறந்த - உன்
நாசி துவாரங்கள் தன்
நுண்ணிய கதவுகளை
தன்னிச்சையாய் திறந்து வைக்கும்
நித்தமும் நீர் பாய்ச்சினேன்
நின் மேல் கொண்ட காதலினால் - நீ
புத்துணர்வோடு விழித்திடுவாய் - உன்
புலன்களை சோம்பல் முறிப்பாய்
நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாய்
மெல்ல மெல்ல புதுப் பொலிவு கண்டு,
வசந்த கால வருகைக்காக காத்திருந்து
இயற்கையின் இன்னொரு முரணாய் . . .
மற்றுமொரு முறை பூப்பெய்துவாய் - உன்
மலர்க் குழந்தைகளை
மடியில் சுமந்திடுவாய் . . .
அன்றுனை நிராகரித்த
பட்டாம்பூச்சி நண்பர்களும்
ஆசையோடு வந்தமர்வர்
ஓசையில்லாமல் மலரிதழ்களில்
சிறியதும் பெரியதும்
சிவப்பும் மஞ்சளுமாய் . . .
அடர் நிறத்தில் பல
வெளிர் நிறத்தில் சில
காலைப் பனியில் நனைந்தும்
மாலை மதியில் உலர்ந்தும்
அழகழகாய் மலர்ந்திடுவாய் - என்ற
ஆழமான நம்பிக்கையில் !
பட்டுப் போன பின்பும் - உனை
விட்டுப் போக மனமில்லை . . .