அன்புள்ள தந்தைக்கு - கார்த்திகேயன் பிச்சை
அன்புள்ள தந்தைக்கு,
குறை ஒன்றும் இல்லை என்று குறை கூற வைத்த என் தந்தையே.
கஷ்டம் என்னை தொட்டுவிடாமல் இருக்க உழைத்தாயே,
பசி என்ற வார்த்தை என் வயிற்றில் வீழாமல் தடுத்தாயே.
இதுவரை தீபாவளியில் புத்தாடை நீ அணிந்து நான் கண்டதில்லை,
இதுவரை புத்தாடையின்றி எனக்கு ஒரு தீபாவளி நீ தந்ததில்லை.
இதுவரை நான் நன்றாக படித்ததில்லை,
இருந்தும் நீ என்னை அடித்ததில்லை.
வசதிகள் இல்லாத போதும் வசதியாய் வாழ வைத்தாய்,
பட்டம் வாங்காத நீ என்னை பட்டம் வாங்க வைத்தாய்.
ஐம்பத்தைந்து வயது வரை சைக்கிளில் சென்றாய்
ஏன் நான் இருபத்தைந்து வயதில் பைக்கில் செல்ல வேண்டும் என்பதற்காகவா,
நடை பழக உன் விரலை கொடுத்தாய்,
உறங்க உன் நெஞ்சத்தை கொடுத்தாய்,
யானை சவாரி செய்ய உன் முதுகை கொடுத்தாய்,
நான் துவண்ட போது உன் தோளை கொடுத்தாய்,
இத்தனையும் கொடுத்த உனக்கு நீ குடி கொள்ள என் இதயத்தை தருகிறேன்.
உன் கை விரல்கள் அன்பால் அரவணைத்தது உண்டு,
ஆனால் கோபத்தால் அடித்ததில்லை.
நாம் இருந்தது சிறிய வீடு அன்று புரியவில்லை,
இன்று புரிந்து கொண்டேன் ஆம் கோவிலின் கருவறையும் சிறிதுதான் என்று.
அழுகாத குழந்தை பிறந்தாலும்,
அமாவாசையில் நிலவு தெரிந்தாலும்,
பூமி சுழல்வதை நிறுத்தினாலும்,
உன் அன்பு என்ற ஜீவநதி என் உள்ளத்தில் பாய்ந்து கொண்டே இருக்கும்.
{kunena_discuss:779}