(Reading time: 2 - 3 minutes)

விவாக ரத்து - சிவரஞ்சனி 

Divorce

அவள் கூறினாள்,

சுடு சொற்களால் அவர்

என் சுயத்தைச்

சுட்டெரித்தார் என்று!

அவன் கூறினான்,

அவள் என்

மரியாதைக்குரியோரை

மதிக்கவில்லை,

என் மரியாதையை

மானபங்கப்படுத்தினாள் என்று!

நீதிபதி கேட்டார்

நீவிர் வேண்டுவதென்ன?

அவனும் அவளும் கூறினர்,

சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட

நரகத்திலிருந்து,

விவேகமின்றி நாங்கள் குதித்த

விவாகத்திலிருந்து

விடுதலை வேண்டும்!

அவர்களுக்கு,

ஆயிரம் காலத்து பயிரை,

அன்பு நீரூற்றி,

நம்பிக்கை உரமிட்டு,

விட்டுக்கொடுத்தல் வெயில் காட்டி,

அகந்தை களை அகற்றி

காக்க வேண்டும் என

ஆலோசனை வழங்கப்பட்டது!

தோற்றன,ஆலோசனையும்,

ஆயிரம் காலத்துப்  பயிரும்!

வென்றனர் அவர்கள்!

விடுதலை எனும்

சிறை பெற்றனர்!

அவர்களின் குழந்தையிடம்

கேட்டார் நீதிபதி!

நீ யாரை நீங்க விரும்புகிறாய்?

யாருடன் வாழ ஏங்குகிறாய்?

அக்குழந்தை பகர்ந்தது,

என் அன்னை அவள் சுயத்திற்காக

என் எதிர்காலத்தை

எரிக்கத் துணிந்தாள்!

அவர் மரியாதையின்

மதிப்புணர்ந்த என் தந்தை

என் வாழ்வின்

மதிப்புணரவில்லை!

இவர்களுள் ஒருவரிடம் சென்று,

அரைகுறை அனாதையாகி,

அவர்கள் சுமக்கும் பல்வேறு

பட்டப் பெயர்களை

நானும் சுமப்பதை விட,

அனாதை எனும்

ஒரு பெயர் சுமந்து

அனாதை இல்லம் செல்வேன்!

ஐயா, தயை கூர்ந்து,

விவாக ரத்திற்கு

இலவச இணைப்பாக,

பெற்றோர் ரத்தினையும்

தாருங்களேன்!

இதனைக் கேட்ட அவர்கள்,

விழி நீருடன்,விவாக ரத்திற்கு

விடுதலை அளித்து

வீடு திரும்பினர்!!!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.