வருவாயோ நீ உயிருடன் - வின்னி
உயிரையே பணயம் வைத்து, காலையில் வேலைக்குப் போய், மாலையில்உயிருடன் வருவாயோ?
உன்னோடு சென்றவர்கள், களைத்து, நடக்க முடியாமல்,வீடு திரும்புவதைப் பார்த்து, நீ எப்போது வருவாயோ என்று கலங்குகிறேன், சந்தேகத்தில்.
விழிமேல் விழிவைத்துக் காத்திருக்கிறேன், என் உயிரைப் பிடித்தபடி.
செத்து மடிகிறேன் ஒவ்வொரு நாளும்.
என் சிந்தனை எல்லாம், நீ குடும்பத்துக்காகப் படும் அவஸ்த்தையை எண்ணித்தான்.
உனக்குப் பிடித்த உணவைச் சுடச் சுடச் செய்து விட்டு அதை பரிமாற,
ஆவலாக காத்திருக்கிறேன், அது ஆறுவதைப் பார்த்து.
எனக்குப் பசிப்பதில்லை நீ வராமல்.
தேசத்துக்கு ஒளி கொடுக்க நீ சொற்ப காசுக்காக உயிரையே பணயம் வைத்து, மாடாய் உழைப்பதை நானறிவேன்,
அறியுமோ, இலாபத்தையே நோக்காகக் கொண்டிருக்கும்,
அந்த பன் நாட்டு நிறுவனம்?
உன் தலையில் எப்போது விழும் அந்த நிலக்கரிச் சுரங்கம் என்றறியாது, நிலத்துக்கு அடியில், கரி தோண்ட, குனிந்தபடி, குளிரிலும் இருட்டிலும்,
நீ செய்வதும் நாட்டுக்காக, ஒரு யுத்தம்தான்!
வருவாயோ நீ உயிருடன் என்றெண்ணித் துடிக்கிறேன், பேதை நான்?
{kunena_discuss:779}