Flexi Classics தொடர்கதை - ஆறிலொரு பங்கு - 05 - சுப்ரமணிய பாரதியார்
காசியில் ஹனுமந்த கட்டத்திலே எனக்குத் தெரிந்தவர்க ளிருக்கிறார்கள். எனது நண்பர் ஒருவருடைய பந்துக்கள் அங்கு வாசம் செய்கின்றனர். இதைப் படிக்கும் தமிழர்கள் காசிக்குப் போயிருப்ப துண்டானால், நான் சொல்லப்போகிற இடம் அவர்களுக்குத் தெளிவாகத் தெரியும். தமிழர்க ளெல்லோரும் பெரும்பாலும் ஹனுமந்த கட்டத்திற்கே போயிறங்குவ துண்டு. அங்கு, கீழ்மேற் சந்து ஒன்றிருக்கிற தல்லவா? அதில் கீழ்மேற்கு மூலையி லிருந்து மூன்றாம் வீடு. அந்த வீட்டிற்குச் சிவமடம் என்று பெயர். யாத்திரைக்காரர்கள் போய் இறங்கக்கூடிய வீடுகளைக் காசியிலே மடங்கள் என்கிறார்கள்.
சிவமடத்தில் போய் இறங்கி ஸ்நாநம் செய்துவிட்டு, மடத்தார் கொடுத்த ஆகாரத்தை உண்ட பிறகு, அப்பொழுதே அந்த மடத்துப் பிள்ளைகளில் ஒருவரைத் துணைக் கழைத்துக் கொண்டு நர்வா கட்டத்திற்குப் போனேன். அங்கே தாய்ப்பூர் ராஜா பங்களா எது என்று விசாரித்துப் பங்களாவிற்குப் போய்ச் சேரும்போது வேளை இரவு ஏழு மணியாகிவிட்டது. வாயிலில் ஒரு குதிரைவண்டி வந்து நின்றது. அந்த வண்டி புறப்படுந் தறுவாயி லிருக்கிறது.
வண்டியின்மேல் ஆங்கிலேய உடை தரித்த ஒரு பெங்காளி உட்கார்ந்து கொண்டிருந்தான். வண்டிப் பக்கத்திலே ஒரு கிழவரும் வேறு சிலரும் நின்று கொண்டிருந்தார்கள். அசுவினி குமார தத்தரின் சித்திரம் நான் பல இடங்களில் பார்த்திருக்கிறபடியால் இந்தக் கிழவர்தான் அசுவினி பாபு என்று தெரிந்து கொண்டேன். நான் போனவுடனே, அசுவினி பாபு பக்கத்திலிருந்த மனிதனை நோக்கி, "யாரோ ஒரு ஸந்யாஸி வந்திருக்கிறார். அவரைத் தாழ்வாரத்தில் உட்காரச் சொல். நான் இதோ வருகிறேன்” என்றார். தாழ்வாரத்தில் போட்டிருந்த இரண்டு நாற்காலிகளில் நானும் என்னுடன் வந்திருந்த வாலிபனும் போய் உட்கார்ந்தோம். அசுவினி பாபுவும் வண்டிக்குள்ளிருந்தவரும் பேசியது என் செவியில் நன்றாக விழுந்தது.
அசுவினி பாபு: "டாக்டர் ஸாஹப், நேற்றைக் காட்டிலும் இன்று சிறிது குணப்பட்டி-ருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. தமது கருத்தென்ன?"
டாக்டர்: "மிகவும் துர்ப்பல நிலையிலேதா னிருக்கிறாள், இன்னும் இருபத்து நான்கு மணிநேரம் இருப்பது கஷ்டம். அந்த நேரம் தப்பினால், பிறகு விபத்தில்லை ” என்றார்.
காதில் விஷத் தடவிய தீ யம்புபோல இந்த வார்த்தை கேட்டது. 'மீனா! மீனா! மீனா!' என்றலறினேன். வண்டி புறப்பட்டுவிட்டது. அதற்குள் நான் தன்னை மீறி அலறிய சத்தம் கேட்டு அசுவினி பாபுவும் அவரைச் சேர்ந்தவர்களும் நானிருந்த பாரிசமாக விரைந்து வந்தனர். அவர் வருதல் கண்டு, நான் மனதை ஒருவாறு தேற்றிக்கொண்டு எழுந்து நின்று வணங்கினேன்.
அவர், "ஸ்வாமிக்கு எவ்விடம்? இங்கு வந்த கருத்தென்ன! ஏன் சத்தம் போட்டீர்கள்” என்று