Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (முதல் பாகம்) - 02 - சரோஜா ராமமூர்த்தி
1.2. பொழுது விடிந்தது
பொழுது பலபல வென்று விடிந்து கொண்டுவந்தது. பவானியின் அடுத்த வீட்டில் கொட்டில் நிறையப் பசுக்கள் கட்டியிருந்தன. அன்று வெள்ளிக்கிழமை யாதலால் அந்த வீட்டு அம்மாள் பசுக்களுக்கு மஞ்சள் பூசி, குங்குமம் இட்டுக் கொண்டிருந்தாள். இங்கொன்றும் அங்கொன்றுமாக நரைத்திருந்த கூந்தலை அள்ளி முடிச்சிட்டு, பசேலென்று மஞ்சள் பூசியிருந்தாள்.
எழுந்தவுடன் மகாலட்சுமி போல விளங்கும் அடுத்த வீட்டுப் பார்வதியைப் பார்த்ததும் பவானியின் மனதுக்கு ஆறுதல் ஏற்பட்டது. நாற்பத்தைந்து வயதுக்கு மேலாகியும் பார்வதியின் தோற்றத்தில் ஒருவித தனிக் கவர்ச்சி இருந்தது. அவளுடைய கணவர் கல்யாணராமன் அடிக்கடி அவளைப் பார்த்துக் கேட்பது வழக்கம்.
”நீ! இப்படிச் சின்னப் பெண் மாதிரி, மல்கோவா மாம்பழம் மாதிரி இருக்கிறாயே. அது என்ன ரகசியம்? ஏதாவது காயகல்பம் செய்து கொண்டாயா? சாப்பாடு கூட ஒரு வேளைதானே சாப்பிடுகிறாய்?"
"ஆமாம். காயகல்பமும், காயாத கல்பமும் எனக்கு எதற்கு? நீங்களாவது சாப்பிடு-வீர்கள்! இவளுக்குத்தான் குழந்தை இல்லையே. இன்னொரு தரம் கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று உங்களுக்குச் சபலம் இருக்கலாம்" என்று பார்வதி சிரித்துக் கொண்டே கூறுவாள்.
"இன்னொரு கல்யாணமா? உன்னை விட்டு விட்டா?" என்று அவர் அகமும் முகமும் மலரச் சொல்வதைப் பவானி தன் வீட்டுச் சமையலறையிலிருந்து எத்தனையோ முறை கேட்டிருக்கிறாள். அவர்களுடைய தாம்பத்திய வாழ்க்கையில் இருந்த நேச பாவத்தை நினைத்தவுடன், அவளுக்குத் தற்கால விவாகரத்துச் சட்டங்களும் ஜீவனாம்ச வழக்குகளும் ஒரு கேலிக் கூத்தாகவே தோன்றின.
அன்று காலையில் எழுந்தவுடன் பார்வதியைப் பார்த்ததும் பவானியின் மனத்துக்கு ஆறுதல் ஏற்பட்டது. இரண்டு வீடுகளுக்கும் இடையில் ஒருகாரைச்சுவர் தான் இருந்தது. இரண்டடி உயரத்தில் இருந்த அந்த சுவர் இருப்பதும் ஒன்றுதான், இல்லாமல் இருப்பதும் ஒன்றுதான். சுவருக்கு அடுத்தாற்போல் பார்வதியின் வீட்டில் ஒரு பவளமல்லிகை மரம் இருந்தது. அதன் கிளைகள் பவானியின் வீட்டுப்பக்கமாகச் சாய்ந்திருந்தன. அதில் மலரும் மலர்கள் யாவும் பவானி பின் வீட்டில் உதிர்ந்திருக்கும்.
“இந்த அதிசயத்தைப் பார்த்தாயா பவானி? தினமும் இரண்டுவேளை தண்ணீர் ஊற்றி வளர்ப்பவளை மறந்து விட்டு, இந்த மரம் உன் வீட்டில் பூவாகக் கொட்டுகிறதே!" என்று சொல்லிக் கொண்டு பார்வதி பவானியைப் பார்த்துச் சிரித்தாள்.
”அது தான் உலக வழக்கம்" என்று பவானி விரக்தியாகப் பதிலளித்து விட்டுக் கீழே