கருத்துக் கதைகள் – 24. நேரம் தவறிவிட்டதால்... - சித்ரா. வெ.
அபி எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி... வசதியான வீட்டில் பிறந்தவள்... கேட்டதெல்லாம் அவளுக்கு கிடைத்துவிடும்... மிகவும் செல்லமாக வளர்க்கப்படுபவள்...
இப்படி செல்லமாக வளர்க்கப்பட்டாலும் படிப்பில் மிகவும் கெட்டிக்காரி... ஏழை பணக்காரன் என்ற பாரபட்சமில்லாமல்... தோழிகளுடன் பழகுபவள்... ஏழை மாணவிகளுக்கு வேண்டிய உதவிகளை செய்பவள்..
ஆனாலும் அவளுக்கு இருக்கும் ஒரு கெட்ட குணம் நேரம் தவறி எழுந்திருப்பது... அதனால் பள்ளிக்கும் தாமதமாக தான் செல்வாள்... வீட்டில் அம்மாவும் பள்ளியில் ஆசிரியையும் கண்டித்தாலும் அரக்கபரக்க பள்ளியில் மணி அடிக்கும் போதோ... இல்லை அதற்கு பிறகோ தான் செல்வாள்...
மற்ற நேரங்களிலும் அவளின் வேலைகளை செய்ய வேண்டிய நேரத்தில் செய்யமாட்டாள்... நான் தான் நன்றாக படிப்பேனே... பிறகு படித்துக் கொள்கிறேன்... பிறகு வீட்டுப்பாடம் எழுதிக் கொள்கிறேன் என்று நேரத்தை கடத்துவாள்...
இப்படியிருக்க ஒருநாள் அவள் பள்ளியில் சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்தனர்... 3 நாள் சுற்றுலா எனவும் அதற்கு தேவையான பணமும் கேட்டனர்...
அபிக்கு தான் பிரச்சனையில்லையே... அவளுக்கு தேவையான பணத்தை வீட்டில் கொடுத்துவிட்டனர்... அவள் தோழிகளும் சுற்றுலாவிற்கு வரப்போவதாக சொன்னார்கள்..
மூன்று நாள் சுற்றுலாவிற்கு தேவையான புது உடை, தின்பண்டங்கள், செலவுக்கான பணம்... எல்லாமே தயார் செய்து விட்டாள்...
காலையில் சீக்கிரமாக வரவேண்டும்... ரயில் கிளம்பிவிடும் என்று பள்ளியில் தகவல் சொல்லி அனுப்பினர்...
அபிக்கு தான் அது மிக கஷ்டமான வேலையாச்சே... அவள் அம்மா அவளை எழுப்பினாலும் இவள் புரண்டு புரண்டு படுத்து... ஒரு வழியாக எழுந்து கிளம்பி செல்வதற்குள்...
இவள் தோழிகள் காத்திருப்பர்... ஆசிரியர்கள் காத்திருப்பர்... ஆனால் ரயில் காத்திருக்குமா...?? அது நேரத்திற்கு சென்றுவிட்டது... அதுவும் சில நேரத்தில் தாமதமாக கிளம்பும் தான்... இன்று பார்த்து சீக்கிரமாக கிளம்பிவிட்டது...
சுற்றுலா செல்ல எல்லாம் தயார் செய்து வைத்து என்ன..?? அபி நேரம் தவறி சென்றதால்... அவளால் சுற்றுலா செல்ல முடியாமல் போனது...
கதை சொல்லும் கருத்து
காலம் பொன் போன்றது
நேரம் கண் போன்றது
ஆனால் இப்போது சிறியவர்கள் மட்டுமல்ல... பெரியவர்களும் அதிக திறமை இருந்தும்... உடனே செய்ய வேண்டுமா..?? மெதுவாக செய்துக் கொள்ளலாம் என்று அவர்களுடைய கடமையை செய்யாமல் நேரத்தை கடத்துகின்றனர்.
செய்ய வேண்டிய நேரத்தில் தன்னுடைய கடமைகளை செய்தால் எவ்வளவோ சாதிக்க முடியும்... அந்த நேரம் தவறிவிட்டால் அது திரும்ப கிடைக்காது... அய்யோ அப்போதே செய்யாமல் போய்விட்டேனே என்று புலம்புவதால் எந்த பயனுமில்லை.