கருத்துக் கதைகள் – 39. ஈதல்... இசைபட வாழ்தல்... - தங்கமணி சுவாமினாதன்
கோசல் ராம் பல கோடிகளுக்குச் சொந்தக்காரர்.அவருக்குப் பல முக்கியமான நகரங்களில் நகைக் கடைகள், ஜவுளிக்கடைகள்,மதுபானக் கடைகள் என்று ஏராளமாக இருந்தன.பணத்திற்குக் கேட்கவா வேண்டும்?
பணம் இருக்கும் இடத்தில் மனம் இருக்காது என்று பொதுவாகச் சொல்வதுண்டு. பணமிருக்கும் எல்லோருக்கும் இது பொருந்தாது.ஆனால் கோசல்ராமுக்குக் கன கச்சிதமாய்ப் பொருந்தும்.ஆம் அந்த அளவுக்கு அவர் ஓர் உலோபி.எச்சில் கையால் காக்கா ஓட்டமாட்டார்.இவ்வளவு பணம் இருந்தும் உதவி என்று கேட்டு வருவோருக்கு பத்து பைசா கூட கொடுக்க மாட்டார்.பசி என்று வருவோரை விரட்டியடிப்பார்.
இல்லாதவர்களை உதாசீனம் செய்வார்.ஏன் அமாவாசை அன்று கூட காகத்திற்கு சாதம் வைக்க யோசிப்பார்.
அவ்வளவு கஞ்சத்தனமானவர்.ஆனால் ஒன்று பிறருக்குத்தான் ஈய மாட்டாரே ஒழிய தானும் தன் குடும்பத்தாரும் மகிழ்ச்சியாய் இருக்க எல்லா வசதியும் செய்து கொள்வார்.நாலு வேளையும்(?) நன்றாகச் சாப்பிடுவார்.தினமும் அறு சுவை உணவுதான்.பசி என்றால் அவருக்கு என்னவென்றே தெரியாது. அவர் வாய் எப்போதும் ஏதாவது தீனியை அறைத்துக் கொண்டே இருக்கும்.அப்படி சாப்பிடும் நேரத்தில் பக்கத்தில் யாராவது இருந்தால் மரியாதைக்குக் கூட சாப்பிடுகிறீர்களா?என்று கேட்க மாட்டார்.மொத்தத்தில் குணக் கேடானவர் கோசல்ராம்.
ஒரு சாயம் அவர் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வெளி நாட்டுக் கார் ஒன்றை விலைக்கு வாங்கினார். டிரைவர் கூட வைத்துக் கொள்ளாமல் தானே அந்த காரை ஓட்டுவார்.அவ்வளவு கருத்து அக்கார் மீது.
ஒரு நாள் ஒரு அவசியத்தின் காரணமாக அந்தக் காரில் வெளியூர் சென்றார்.அவ்வூர் வெகு தொலைவில் இருந்தது.வெகு தொலைவு சென்று விட்டார்.இரவு நெருங்கும் நேரம்.அவருக்குப் பசி எடுத்தது.பசியே எப்படி இருக்கும் என அறியாத அவருக்கு பசியைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.ஏதாவது ஹோட்டலுக்குச் செல்லலாமென நினத்தபோது என்ன காரணமோ தெரியவில்லை கடைகளெல்லாம் இழுத்து மூடப்பட்டன.
மக்கள் இங்கும் அங்கும் கத்திக் கொண்டே ஓடினர்.கூச்சலிட்டனர்.நொடியில் கலவரம் மூண்டது.வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.இவர் இவரின் காரிலிருந்து வெளியே இழுக்கப்பட்டு இவரின் காருக்கு தீயிடப்பட்டது.காவல் துறையினர் குவிந்தனர்.அந்த நேரத்தை பயன்படுத்தி சிலர் இவரின்
செயின் மோதிரம் வாட்ச் பணம் செல்போன் அனைத்தையும் பறித்துக் கொண்டனர்...நிற்கதியானார் அந்த பணக்காரர் கோசல்ராம்.இவருக்கும் உடலில் ஆங்காங்கே அடி கிடைத்தது.அடியின் வலியும் பசியும் இவரைப் பாடாப் படுத்தின.ஏதாவது சாப்பிடா விட்டால் செத்துவிடுவோம் என நினைத்தார் கோசல்ராம்.அந்த ஊரிலிருந்து வெளியேயும் யாரும் செல்ல முடியவில்லை..வெளியிலிருந்தும் உள்ளே யாரும்.வரமுடியவில்லை.தடை உத்தரவு போடப்பட்டது. .முதல்முதலாய் பசியின் கொடுமையை உணர்ந்தார் அவர்.வயிற்றுக்குச் சோறும் இல்லை கையில் காசும் இல்லை.ஏழ்மையின் கொடுமை எப்படியிருக்கும் என்பது புரிய ஆரம்பித்தது அந்த பணக்கார ஏழைக்கு.பசி தாங்க முடியாத அவருக்கு வெட்கமும் மறந்து போயிற்று.ஒரு வீட்டின் முன் போய் நின்று அம்மா...மிகவும் பசிக்கிறது கொஞ்சம் சாப்பிட ஏதும் கொடுங்களேன் என்று கெஞ்சினார் அந்த பணக்காரப் பிச்சைக்காரர்.
கெஞ்சும் இவரின் குரல் கேட்டு ஒரு அலுமினியத்தட்டில் கொஞ்சம் பழைய சோற்றை வைத்து கொண்டு வந்து கொடுத்தாள் ஒரு பெண்மணி.அதில் உப்போ ஊறுகாயோ கிடையாது.பசிக்கொடுமையால்.. தினமும் அறுசுவை உணவு உண்ணும் அந்த சீமான் அந்த பழைய சோற்றை அரக்க பரக்க அள்ளித் தின்றார். அவரின் பசி அடங்கியது.அதே சமயம் அவரிடமிருந்து பணக்காரனென்ற மமதை கர்வம் செருக்கு திமிர் ஏழைள் மீது இருந்த அலட்ச்சியம் அனைத்தும் அடியோடு அவரை விட்டு அகன்றன.புதிய மனிதரானார் அவர்.இனி பகுந்துண்டு பல்லுயிர் ஓம்புதலும் இல்லாதோருக்கு உதவுதலும் நாடி வருவோரை மதித்துக் காத்தலுமான ..நற் பண்புகளோடு வாழ வேண்டும்என தீர்மானித்த கோசல் ராம் நடந்தே தன் ஊர் நோக்கி தன் வீடு நோக்கிச் செல்ல தீர்மானித்து முதலடி எடுத்து வைத்தார்.இனி அவர் நடக்கும் பாதை நல்ல பாதையாகவே இருக்குமென்பதில் சந்தேகமே இல்லை.
கதை சொல்லும் கருத்து:
இல்லாதோருக்கு ஈந்து வாழ்தலே வாழ்க்கை...