கருத்துக் கதைகள் – 45. ஜென் ஒரு தத்துவமல்ல..அது ஒரு வாழ்க்கை முறை... - தங்கமணி சுவாமினாதன்
அந்த ஜென் குருவிடம் நான்கு மாணவர்கள் பயிற்சி பெற்று வந்தார்கள்.ஒரு நாள் அவர்கள் ஏழு நாள் மௌனம் கடைபிடிப்பதென தீர்மானித்தார்கள்.முதலிரண்டு நாளும் மௌனமாகவே போயிற்று.மூன்றாம் நாள் இரவு தூங்கப் போயினர்.
விளக்குகள் அணைக்கப்படவில்லை.
யாராவது விளைக்கை அணையுங்களேன் என்றான் முதலாமவன்.அவன் இப்படிச் சொன்னதால் அவனின் மௌனம் கலைந்தது.
நாம் மௌனம் காக்கிறோம் பேசக்கூடாது என்றான் இரண்டாமவன்.
அவன் இவ்வாறு சொன்னதால் அவன் மௌனமும் கலைந்தது.
நீ என்ன செய்கிறாய்? நீயும் பேசுகிறாயே என்றான் மூன்றாமவன்..இப்போது இவன் மௌனமும் கலைந்தது.
நான் ஒருத்தன்தான் இன்னும் பேசவில்லை என்றான் நான்காமவன்..அதன் காரணமாய் அவன் மௌனமும் கலைந்தது.
இதிலிருக்கும் நகைச் சுவையை மீறி இருக்கும் நீதி ஒன்றை நாம் பார்க்கவேண்டும்.
விளக்கு எரிவதைக்கண்ட முதலாமவன் தானே எழுந்து சென்று விளக்கை அணைத்திருந்தால் அவன் மட்டுமல்ல மற்ற நூல்வரும் கூட பேசியிருக்க வேண்டிய அவசியம் இல்லை.
நாலாவது ஆள் வரை யாருமே சென்று விளக்கை அணைக்கவில்லை.
சில நிமிடங்களில் செய்து முடிக்கக் கூடிய வேலையை செய்யாமல் இருந்ததற்கு பதினைந்து நிமிடங்களுக்கு விளக்கம் தருவது மனித இயல்பு.ஒரு வேலையைச் செய்து முடிக்கக் காரணமே சொல்லவேண்டாம். ஆனால் செய்யாமலிருக்கத் தேவையான காரணங்களைச் சிரமப்பட்டுத் தேடிக்கொண்டிருப்போம்.