சிறுகதை - டெங்கு - பூவேந்தன்
அது ஒரு பகல் நேரம், அப்போதுதான் வந்து என் மேல் அமர்ந்தது அந்த கொசு..
சட்டென கை ஓங்கினேன்.
"என்ன அடிக்கப்போகிறாயா"என்றது
"ஆம்" என்றேன்
"என் சில கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு பிறகு அடி" என்றது
"ம்..கேள்" என்றேன்.
இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமே உரியதா?
இல்லை.
நீங்களும் வேறு உயிர்களை கொல்வீர்கள்தானே?
ஆம்.
அவை எதுவும் யாரிடமும் உங்களைப்பற்றி முறையிடுவதில்லையே?
இல்லை.
நீங்கள் ஆற்றை கொள்ளையடித்தீர்கள் நீர் வறண்டது.மரங்களை வெட்டினீர்கள் மழை பொய்த்தது.
சுற்றுப்புறத்தை பாழாக்கினீர்கள் சுகாதாரம் கெட்டது.
"ஆனால் இதற்கெல்லாம் அரசாங்கம்" என்று சொல்வதற்குள்
"ம்ம் உங்களுக்கு ஒரு சாக்கு அரசை குறை கூற" நீங்கள் தேர்ந்தெடுத்ததுதானே?
ஆம்.
பிறகென்ன அனுபவியுங்கள்.
ஆனால் கொசுவே நீ மனிதர்களை கடித்துக் கொல்வது..
ஏன் நீங்கள் சக மனிதர்களை கொல்வதில்லையா?
போட்டி,பொறாமை, காதல், காமம்,பணம், பதவி என்று அதைவிடவா ?
"மனிதன் யாவற்றிலும் மேம்பட்டவன் ஆறறிவு ஜீவன் " என்றேன்
மானிடா உனக்கு தெரியுமா உலகில் கொசுக்களை முற்றிலும் அழித்து விட்டாலும் பெரும் சூழியல் ஆபத்து நேருமென்று.
நாங்கள் வேறு என்னதான் செய்வது?
தப்பிப்பிழைத்துக்கொள், ஒழுங்காயிறு இன்றில்லையெனினும் என்றேனும் சாகத்தானேபோகிறாய்.
"சரி இப்போது என்ன செய்யப்போகிறாய்" என்று கேட்டுக்கொண்டே ஒரே அடியில் அடித்துவிட்டேன் அந்த கொசுவை..
ஏனோ சிறிது நேரத்தில் எனக்கு லேசாக தலைவலியும் காய்ச்சலும் அடிக்கத்தொடங்கியது..
"மனிதா எப்படியும் என்னை கொன்றுவிடுவாய் என தெரியும், ஏனெனில் உன் புத்தி அப்படி, ஆகவே பேசும்போதே உன்னை கடித்துவிட்டேன், உனக்கு சாவு நிச்சயம், போய்ச்சேர்" என்று சொல்லி விழுந்தது அந்த டெங்கு கொசு.
{kunena_discuss:785}