சிறுகதை - தண்ணீர்! தண்ணீர்! - ரவை
" இந்தப் பிரச்னைக்கு உடனடியாக ஒரு தீர்வு காணவேண்டும். ஊர்மக்களை மாரியம்மன் கோவிலில் கூட்டுங்கள்!"
பூங்காவனம் கிராமத்தில், கடந்த சில ஆண்டுகளாக, வானம் பொய்த்துவிட்டதாலும், காவிரியின் கிளையாக ஓடும் சிற்றாறும் வரண்டுவிட்டதாலும், ஏரி, குளம் எதுவும் இல்லாத காரணத்தாலும், அங்கு வாழும் மக்கள் தங்கள் கிணற்றுத் தண்ணீரை மட்டுமே நம்பி வாழ்கின்றனர்.
சேரியில் வாழும் குப்பத்து மக்கள், மாரியம்மன் கோவில் அருகிலிருந்த பொதுக் கிணற்றுநீரை மட்டுமே நம்பி வாழ்கின்றனர்.
நிலத்தடி நீரும் வற்றிவிட்டதால், தெருவீடுகளிலுள்ள கிணறுகளும் வற்றி, பாறைகள் தெரிந்தன!
குடிக்கக்கூட, ஒரு சொட்டு நீர் இல்லாமல் எப்படி வாழமுடியும்?
ஊரிலுள்ள நான்கு வீதிகளிலும் ஏறக்குறைய நூறு குடும்பங்கள் வாழ்கின்றன.
தண்டோரா போடாமலே, ஊர்மக்கள் கோவிலில் கூடிவிட்டனர்.
வயதில் மூத்தவரான ராமலிங்கத்தேவர் கூட்டத்தை துவக்கிவைத்தார்.
" குளிக்காமல், துணி துவைக்காமல், பாத்திரம் துலக்காமல், இருந்துவிடலாம். சோறு சமைக்கவேண்டாமா? தாகத்துக்கு தண்ணீர் வேண்டாமா? உடனடியாக ஏதாவது செய்தாகவேண்டும். அவரவர்களுக்கு தோன்றுகிற யோசனையை வெளிப்படையாகப் பேசுங்கள். எது சாத்தியமோ, அதை உடனடியாக செய்து சமாளிப்போம். உம்! முதலில் யார் பேசப்போகிறீர்கள்?"
மளிகைக்கடை ரத்னம் செட்டியார் எழுந்தார்.
" இப்பொழுதே நாம் அனைவரும் ஒன்றாக, மாவட்ட அதிகாரியை சந்தித்து மனு கொடுப்போம். அரசாங்கமோ, நகராட்சியோதான் இந்த பிரச்னையை தீர்க்க முடியுமேதவிர, தனிநபர் யாராலும் முடியாது............."
கிராம அதிகாரி முனுசாமி எழுந்தார்.
" செட்டியார் சொல்வது சரிதான். ஆனால், அரசோ, நகராட்சியோ பேசி, விவாதித்து, முடிவெடுத்து, செயல்படுத்த பல நாட்கள் ஆகுமே, அதுவரை என்ன செய்வது?"
பூசாரி விநாயகம் பேசினார்.
"மாரியம்மனுக்கு தேவையான தண்ணீருக்கு முதலில் வழி செய்யவேண்டும். இல்லையெனில், தெய்வகுற்றம் ஆகிவிடும்.........."
கூட்டத் தலைவர் தேவர் எல்லோரையும் கையசைத்து அமரச்சொன்னார்.