சிறுகதை - எது அழகு? - ரவை
மங்கம்மா பெண்கள் கல்லூரி பட்டப்படிப்பு இறுதி ஆண்டு மாணவிகள், தங்கள் கல்லூரி வாழ்வின் இறுதிநாளன்று, பிரிவு உபசார விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். மொத்தம் நாற்பது பேர்.
அந்த விழாவில் கலந்துகொள்ள, மாணவிகள் தங்கள் பாய்ஃபிரெண்டையும் அழைத்துவரவேண்டும் என்ற நிபந்தனையை எல்லோரும் ஒப்புக்கொண்டனர்.
மங்கம்மா கல்லூரி அருகிலேயே, கட்டபொம்மன் ஆண்கள் கல்லூரியும் உள்ளதால், அந்தக் கல்லூரி மாணவர்களுக்கும் பெண்கள் கல்லூரி மாணவிகளுக்கும் தொடர்பு, நட்பு, பரிச்சயம், காதல், எனப் பலவகை உறவுகள் இருந்தன.
குறிப்பாக, இறுதி ஆண்டு மாணவ-மாணவிகளிடையே நெருக்கம் அதிகம்.
விழா நடந்து முடிந்தபிறகு, ஒவ்வொருவரும் அவரவர் ஊருக்குப் போய்விடுவதால், பிறகு சந்திக்கிற சந்தர்ப்பம் கிடைப்பது அரிதென்று, மாணவிகள் நடத்தும் விழாவுக்கு அவரவரின் பாய்ஃபிரெண்ட்ஸும் வரவேண்டுமென்ற கோரிக்கையில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொண்டு, எல்லோரும் சம்மதித்தனர்.
மாணவிகளிலே, ஒவ்வொருவரும் வேறுவேறு துறைகளில் தேர்ச்சி பெற்று பிறர் கவனத்தைக் கவர்ந்தனர். அவர்களில், தோற்றத்தின் அழகுக்காக கவர்ந்தவள் ரேணுகா!
ஐந்தரை அடி உயரம். எடுப்பான நாசி. வட்டமுகம். மயில் கழுத்து. தோல் நிறத்தை வெள்ளை என்பதா, சிவப்பு என்பதா, ரோஸ் என்பதா என்று குழப்பம் இருந்தாலும், மிக மிக கவர்ச்சியான முகம் என்பது ஏகோபித்த அபிப்பிராயம்!
அவள் தேர்ந்தெடுத்திருக்கிற நண்பன், அவளுக்கு நிகரானவனா, அவளைவிட அழகானவனா என்பதை தெரிந்துகொள்ள, மற்ற மாணவிகளுக்கு ஆர்வம்.
அவள் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து, வழிமேல் விழிவைத்து காத்திருந்தனர்.
ரேணுகா, தன் நண்பனின் கைகோர்த்து, முகத்தில் பெருமை பொங்க உள்ளே நுழைந்தாள்.
மற்றவர்கள் கைதட்டி வரவேற்றனர்.
விழா துவங்கி ஆடல், பாடல், பேச்சு, விருந்து என உற்சாகமாக நடந்துகொண்டிருந்தது ஒருபுறம்! மறுபுறத்தில், ரேணுகாவின் நண்பனைப்பற்றின அபிப்பிராயங்களும்தான்!
" என்னாலே நம்பவே முடியவில்லையே, ரேணுவின் அழகெங்கே, அவனுடைய கருத்த நிறமெங்கே! ரேணு எப்படி ஒரு கருப்பனை தேர்ந்தெடுத்தாள். அங்கே பாரேன்! எவ்வளவு மகிழ்ச்சியுடன் அந்த கருப்பனுடன் பேசிக்கொண்டிருக்கிறாள்! எனக்கு அதிர்ச்சியை தாங்கிக்கவே முடியலே....."
" நிறத்தை விடு! அவனைப் பார்த்தால், கல்லூரி மாணவன்போலத் தெரியவில்லையே..........."