பொங்கல் 2020 ஸ்பெஷல் சிறுகதை - உழவுக்கு வந்தனை செய் - ரவை
சீர்காழி தாலூகா, மகாதானம்-அரசூரிக்கிடையே பத்து ஏக்கர் நஞ்சை, பத்து ஏக்கர் புஞ்சை நிலத்துக்குச் சொந்தக்காரன் கங்காதரன்!
பத்து ஆண்டுகள் முன்பு, பொங்கல் திருநாளுக்கு இரண்டு நாட்கள் முன்பு, களத்துமேட்டில், இடுப்பில் கை வைத்துக்கொண்டு, சுற்றி நடப்பதை நோட்டம் விடுகிறார்.
ஒரு பக்கத்தில், அறுவடையான பயிரிலிருந்து பிரித்து குவிக்கப்பட்ட நெற்குவியல் ஒருபுறம்!
மறுபுறத்தில், வைக்கல்போர்!
நீண்ட மாட்டுவண்டிகளில், நெல் மூட்டைகள் ஏற்றிச் செல்லப்படுகின்றன!
நெற்குவியலில் இருந்து, வயலில் உழுது பாடுபட்ட குடியானவர்களுக்கு நெல் அள்ளி அள்ளி வழங்கப்படுகின்றன! பெற்றுக்கொண்டவர்கள் இறைவனுக்கும் கங்காதரனுக்கும் உள்ளப் பூர்வமான நன்றியை தெரிவித்துச் செல்கின்றனர்.!
"எலே கழுக்காணி! யாருக்கும் குறையில்லாம தாராளமா நெல் அளந்து போடுடா! அவங்க உழைப்பிலே கிடைச்ச பொன்னுடா!....."
நஞ்சை வயற்புற களத்துமேட்டிலே, கங்காதரன் மேற்பார்வையிடும் அதே நேரத்தில், புஞ்சை வள பூமியில் அவர் மனைவி யோகம் முகமெல்லாம் புன்னகையாக, கரும்புகள் வண்டிகளில் ஏற்றப்படுவதையும், மற்ற பயிர் விளைச்சல்கள் களத்துமேட்டில் குவிக்கப்படுவதையும், பிறிதொரு இடத்தில் பல வண்ண பூக்கள் மூட்டை மூட்டையாக எடுத்துச் செல்லப்படுவதையும் பார்த்து மகிழ்ந்துகொண்டிருந்தாள்.
"எலே பாவாடை! நம்ம சனங்களுக்கு எத்தினி கரும்பு வேணுமோ, அதை தனியா எடுத்து வைச்சிட்டு, மற்றதை வண்டியிலேயே ஏற்று! இனிப்பான கரும்புபோல, எல்லார் வாழ்க்கையும் இனிப்பா இருக்கணும்....."
" அம்மா! ஐயாவும் நீங்களும் எங்களையெல்லாம் கண்ணுங் கருத்துமா பார்த்துக்கிறீங்க! எங்க புள்ளைங்களை படிக்க வைக்கறீங்க! எல்லார்க்கும் துணிமணி எடுத்து தர்ரீங்க! கண்ணாலம் செய்து வைக்கிறீங்க! தேர், திருவிழா நடத்துறீங்க! எங்களுக்கு ஒரு குறையும் இல்லேம்மா!"
" பாவாடை! மேலே இருக்கிற கடவுள் செய்யறாண்டா இத்தனையும்! நீயும் நானும் ஒரு துரும்பைக்கூட அசைக்கமுடியாதுடா, அவன் நினைக்கலேன்னா! நம்ம எல்லாருக்கும் படி அளக்கிற புண்ணியவான், அவன்டா!"
" அம்மா! நீங்க என்ன சொன்னாலும், எங்களுக்கு நீங்களும் ஐயாவும் தாம்மா, கண்கண்ட தெய்வம்!"
" அது சரிடா! உன் புள்ளே, சென்னையிலே மேல்படிப்புக்கு போயிருக்கானே, பொங்கலுக்கு ஊருக்கு வரானா?"