சிறுகதை - விரைந்தோடிய தனிமை! - ரவை
வீடு திடீரென கலகலப்பானதும், உமாநாத்துக்கு உற்சாகம் கரை புரண்டோடியது!
கடலூரிலிருந்து வந்து இணைத்துக்கொண்ட ரத்தினத்தின் தாய், தங்கை அடங்கிய குடும்பம், இருண்டுகிடந்த வீட்டில் ஒளி கூட்டியது.
நிசப்தமாயிருந்த இடத்தில் சிரிப்பும், பேச்சும் மிதந்து கலகலப்பை தந்தன!
உமாநாத்தின் மனதில் ஆதிக்கம் செலுத்திய வெறுமை, விரைந்தோடியது. போன இடம் தெரியவில்லை!
மறைந்த மனைவி கிருபா இருந்தபோது நிலவிய குதூகலத்தைவிட, தற்போது கூடுதலாகவே இருப்பதாக உமாநாத் உண்மையிலேயே உணர்ந்தான்.
அப்படியொரு மாற்றத்தை ஓரிரவில் உருவாக்கித் தந்த இறைவனை மனமார வணங்கித் துதித்தான், மூன்று வேளைகளும்!
ஓராண்டாக நின்றுபோயிருந்த தினசரி வேலைகளை உற்சாகமாக மீண்டும் துவக்கினான்.
காய்கறி மார்க்கெட் சென்று கறிகாய்களை வாங்கிவந்தான். மளிகைக்கடைக்கு போன் செய்து, சமையலுக்குத் தேவையான பொருட்களை தாராளமாக தருவித்தான்.
ரத்தினத்தின் தாய் கோதையும், தங்கை பாப்பாவும், போட்டி போட்டு விதவிதமாக சமைத்துப் போட்டு அசத்தினர்.
ஓட்டல் சாப்பாடு ஒத்துக்கொள்ளாமல், உமாநாத்தை வாட்டிய வயிற்றுவலி தலைதெறிக்க ஓடியது!
பத்து மணி ஆபீஸ்க்கு உமாநாத் ஒருமணி முன்னதாகவே போய்க்கொண்டிருந்த உமாநாத், இப்போதெல்லாம் கரெக்டாக பத்து மணிக்குத்தான் வந்தான்.
அதேபோல, மாலையில், கிளப், சினிமா என ஊர் சுற்றிவிட்டு இரவு தாமதமாக வீடு திரும்பிக்கொண்டிருந்தவன் இப்போது, நூல் பிடித்தாற்போல, ஆபீஸ் விட்டதும் வீடு வந்து சேர்ந்தான்.
மாலையில், வீடு திரும்பியதும், முதல் வேலையாக, ரத்தினத்தை விசாரிப்பான்.
" இன்னிக்கி எங்கெங்கே போனே? ஏதாவது வேலை கிடைக்கும்போல் தெரிகிறதா?" என்றெல்லாம் விசாரிப்பான்.
பிறகு, பாப்பாவிடம் பேச்சுக் கொடுப்பான்.
"தங்கச்சி! நீ என்ன படிச்சிருக்கே?"
" பி.ஏ."
" என்னது? பி.ஏ.யா? பின்னே ஏன் வீட்டிலேயே அடைஞ்சு கிடக்கிறே? வேலைக்குப் போவதுதானே?"