சிறுகதை - சறுக்கும் ஏணி! - ரவை
பிப்ரவரி முப்பதாம் தேதி!
அமாவாசை நிலவு!
மைல்ரேஸ் ஓடிய முதியவர்!
ஶ்ரீராமனின் இரண்டாம் மனைவி!
சட்டம் மீறிய நீதிபதி!
இவையனைத்துமே நடக்கலாம், ஆனால், லஞ்சம் வாங்காத பதிவாளர் அலுவலகத்தை பார்க்கமுடியுமா?
இதை நாம யாராவது சொல்லியிருந்தா, கைது பண்ணி உள்ள தள்ளிடுவாங்க!
ஹைகோர்ட் ஜட்ஜ் ஒருத்தர் நடுகோர்ட்டிலே எல்லாருக்கும் முன்பு சொன்னதா கேள்வி!
அது நடந்து கொஞ்சநாள் ஆயிடுத்து! இப்ப நிலமை மாறியிருக்கும்னு நம்பி, தைரியமா கிளம்பினேன்.
ஒண்ணும் பெரிய வேலையில்லை, நான் எழுதியுள்ள உயிலை பதிவு செய்யத்தான்!
பதிவாளர் அலுவலகம் வாசலில், மக்கள் வந்துபோய்க் கொண்டிருந்தனர்.
நான் நுழைந்ததும், அங்கிருந்த காவலாளி, என்னை தடுத்து நிறுத்தினான்.
" பெரிசு, என்ன வேணும்? எதுக்கு வந்திருக்கீங்க?"
" இந்த உயிலை பதிவு செய்யணும்......."
" முதல்லே, அங்க நிக்கறாரே, புரோக்கர்! அவரிடம் உயிலை காட்டுங்க! அவர் சொல்றபடி கேளுங்க, போங்க!"
" தேவையில்லப்பா! சட்டப்படி சரியா இருக்கு, நான் உள்ளே போய் பேசிக்கிறேன், வழியை விடு!"
" அப்படியா! டயத்தை வீணாக்கவேணாம்னு சொன்னேன், போங்க, போங்க! திரும்பி என்னிடம்தான் வந்தாகணும்!"
உள்ளே போய், அலுவலகத்தை நோட்டம் விட்டேன். நடுநாயகமா, பதிவாளர்! அவரை சுற்றி ரெண்டு பக்கமும் நாலு குமாஸ்தாக்கள்!
நேரே பதிவாளரிடம் சென்றேன்.
" ஐயா! இந்த உயிலை பதிவு செய்யணும்......."
" ஸ்டாம்ப் பேப்பரிலே எழுதியாச்சா?"
" தேவையில்லே, வெறும் உயில்தான், சொத்து ஒண்ணும் மாறலை, அதனாலே பதிவு செய்தா போதும்......"
" அப்படியா! நீங்க லாயரா? விஷயம் தெரிந்தமாதிரி பேசறீங்களே!"