சிறுகதை - அநியாயமான நியாயம்! - ரவை
பெரும் பதட்டத்துடன், டாக்டர் வீட்டுக்கு ஓடிக்கொண்டிருந்த முனுசாமியை போலீஸ் தடுத்து நிறுத்தியது!
" நீ முனுசாமி தானே?"
" ஐயா! எங்கம்மா தலைசுற்றி கீழே விழுந்துட்டாங்க, டாக்டர் வீட்டுக்கு ஓடிக்கிட்டிருக்கேன், தடுக்காதீங்க!"
" இந்தமாதிரி பீலா விட்டு எங்க பிடியிலிருந்து தப்பிக்கிறதுதானே உங்க கும்பலின் தந்திரம்! உனக்கு லெனினை தெரியுமா?"
" லெனினை தெரியாத தொழிலாளி இருக்கமுடியுமா? நல்லா தெரியும்......சரி, எங்கம்மா உயிர் ஊசலாடுது, வழியை விடுங்க!"
" லெனினை நல்லா தெரியுமா, அப்ப வா! ஸ்டேஷனுக்கு! உன்னை விசாரிக்கணும்........"
" ஐயா! நான் பத்தாவது வரையிலும் படிச்சிருக்கேன், சரித்திர பாடத்திலே வந்திருக்கே, ரஷ்யாவிலே புரட்சி ஏற்படுத்தி மக்களாட்சியை கொண்டு வந்தவர், லெனின்னு! ஐயோ! எங்கம்மா உயிரு.....?"
" நடிக்காதே! நான் சொல்ற லெனின், இப்ப இந்த ஊரிலே வாழற புரட்சியாளர் தலைவன்! முதலமைச்சரை கொல்ல சதி நடத்தறதா தகவல் வந்திருக்கு, நீ அவன்கூட நெருங்கிப் பழகிறவன்னு துப்பு கிடைச்சிருக்கு, நட ஸ்டேஷனுக்கு!"
பிடரியில் கைவைத்து முனுசாமியை, போலீஸ் தள்ளிக்கொண்டு போனான்.
"எங்கம்மா?"
" உங்க தலைவர் லெனின் காப்பாற்றுவார்!"
"அடப் பாவிங்களா?"
முனுசாமி பொய் சொல்லவில்லை, அவன் அம்மா தலைசுற்றி மயங்கி விழுந்திருப்பது, உண்மை!
ஒரு மகனுக்குரிய கடமையல்லவா, தாயின் உயிரை ஆபத்திலிருந்து காப்பாற்றுவது!
கடமையை செய்வது, நியாயந்தானே!
போலீஸ் தன் கடமை செய்ததும் தவறில்லை! முதலமைச்சர் உயிருக்கு ஏற்படவிருக்கும் ஆபத்தை தடுக்க எல்லா நடவடிக்கையும் எடுக்கவேண்டாமா?
போலீஸ் கடமையாற்ற, முனுசாமியை ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்வதும் நியாயம்!
இரண்டு நியாயங்களுக்கு இடையே சிக்கி, ஒரு உயிர் பிரிந்தால், அது நியாயமா, அநியாயமா?
அல்லது அநியாயமான நியாயமா? நீங்களே சொல்லுங்கள்!
முனுசாமியின் கூற்றை நம்பி, போலீஸ் அவனை விடுவித்து, அவன் தப்பியோடிவிட்டால்.......?