சிறுகதை - துணை ஒன்று தேவை - ரவை
'கேட்டவரெல்லாம் பாடலாம் என் பாட்டுக்கு தாளம் போடலாம்!'
என்ற சினிமாப் பாட்டை தேவிகா இடுப்பை அசைத்துப் பாடியவாறே, அடுப்பில் வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகைப் போட்டாள். கடுகு வெடிக்கிற அந்த சத்தம் அவளுக்குப் பிடிக்கும்!
கடுகு வெடித்து முடித்த போது, தயாராக நறுக்கி வைத்திருந்த வெண்டைக்காய்களை அந்த வாணலியில் போட்டு வதக்கினாள்.
இப்போது, மறுபடியும் இடுப்பை அசைத்து பாடினாள் 'தமிழுக்கும் அமுதென்று பேர்! அந்த தமிழ், இன்பத் தமிழ், எங்கள் உயிருக்கு நேர்!' என்று இனிமையாக அவள் பாடியதும், கையொலி கேட்டது!
திரும்பிப் பார்த்தாள்! மாமா கல்யாணராமன்!
" தேவி! நீ ரொம்ப லக்கி கேர்ல்! பணக்காரன் ஒருத்தன், உன்னை, கட்டிக்க ரெடியா இருக்கான், நீ அவன் பெண்டாட்டி ஆனபிறகு, நான் உன்னை பார்க்கக்கூட உன் அறைக்கு வெளியே காத்துக் கிடக்கணும், ஆனா, எனக்குத் தெரியும், நீ என் குரல் கேட்டு, 'மாமா'ன்னு ஓடிவந்துடுவே...."
தேவிகா என்ன பதில் தந்தாள் என்பதை அறியுமுன், அவளைப் பற்றி தெரிந்து கொள்வோமே!
கல்யாணராமனின் தங்கை, கோமதியின் மகள், தேவிகா!
கோமதியும் தேவிகாவும் கல்யாணராமனின் வீட்டில் அடைக்கலம் கேட்டுப் பெற்று இந்த வீட்டிற்குள் வந்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன.
அப்போது, தேவிகா கைக்குழந்தை!
அவள் தந்தை, கோமதி யின் கணவன், வசதியாக வாழ்ந்து வந்தவன், திடீரென மாரடைப்பில் இறந்துவிட்டான்.
வசதியாக வாழ்ந்தவன் கோமதிக்கு எதையும் விட்டுச் செல்லவில்லை, செலவாளி! அண்ணன் கல்யாணராமன், இருவரையும் அழைத்துவந்த போது, மனைவியிழந்து மூன்று வயது மகன் தர்மனுடன் திண்டாடியதால் தங்கையின் வரவு அவருக்கு பெரிய ஆதரவு தந்தது!
அன்றிலிருந்து கோமதி தான், அந்த வீட்டின் பொறுப்போடு, தர்மனையும் கவனித்து, வளர்த்து, அவன் இப்போது பட்டதாரி ஆகி உள்ளான்.
அவனுக்கு எல்லாமே, அத்தை கோமதிதான்! அப்பா கல்யாணராமன் வீட்டிலேயே தங்கமாட்டார்.
தங்கியிருக்கும் சிறிது நேரத்திலும், கோமதியையும் தேவிகாவும் மிரட்டி வேலை வாங்குவார். தன் மகன் தர்மனுக்கும் அவர்களை எடுபிடி வேலை செய்யச் சொல்வார்!