உடம்பை அமுக்கி விடுகிறான், சாரங்குக்கு உடலில் எண்ணெய் தடவி விடுகிறான், தலைவாரிச் சீவி விடுகிறான். கைகால் அயரும் வரை வேலை செய்கிறான். சமையலில் மாலுமியும் அவனுக்குக் கொஞ்சம் உதவி செய்வதால் தான் இன்னும் தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கிறான் அவன். அப்படியும் சம்பளம் இல்லை, சாரங்குக்குத் திருப்தியில்லை. மாறாக அவனுக்கு அபராதம் போட முடியவில்லையே என்று வருத்தம் சாரங்குக்கு! அதற்காகத்தான் அவன் சில சமயம் நசீமை பட்டினி போட்டு வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் மிச்சப் படுத்துகிறான்.
படகில் அரிசி, உப்பு, வெங்காயம், மிளகாய் இவற்றைத் தருவது சாரங்கின் பொறுப்பு. மற்றவற்றை, எண்ணெய், மசாலா, மீன், காய்கறி, அவரவர் தங்கள் செலவில் போட்டுக் கொள்ள வேண்டும். மாதம் முடிந்த பின் அரிசி, உப்பு,வெங்காயம், மிளகாயின் விலை ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடித்துக் கொள்ளப் படும், அதுவும் சாரங்கின் இஷ்டப் படி தான்.
"சாரங்கைக் குஷிப்படுத்தனுமின்னாத் திருட்டிலே இறங்கு!" யாரோ நசீமின் காதில் கிசுகிசுத்தான்.
🌼🌸❀✿🌷
சில சமயம் இந்தப் படகோடு சரக்குத் தோணியொன்றை இணைத்து விடுவார்கள். அந்தத் தோணி நிறைய அரிசி, உப்பு, மிளகாய் போன்ற சரக்குகள் இருக்கும். அத்துடன் சில ஆட்களும் இருப்பார்கள். அவர்களுக்கும் இந்தப் படகின் சாரங்குக்கு மிடையே ஏதாவது ஏற்பாடு இருக்கும்.. படகுக்கு வேண்டிய சரக்குகள் வாங்கிப் போடுவதிலும் கொஞ்சம் பணம் மிச்சப் படுத்துவான் சாரங்க்.
நசீமுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. படகில் வேலை செய்வதில் அவனுக்கு ஒரு பிரயோசனமும் இல்லை. படகு ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒரே வழியில் பயணிக்கும். அந்தி நேரத்தில் வந்து சேர வேண்டிய இடத்துக்கு வந்து சேர ஒவ்வொரு சமயம் நள்ளிரவு ஆகிவிடும், ஒவ்வொரு சமயம் மறுநாள் பொழுது புலர்ந்து விடும். இது ஒன்று தான் இந்த பயண வாழ்க்கையில் நேரும் மாறுதல். மற்றபடி எல்லாமே அலுப்பைத் தரும் ஒரே மாதிரியான நிகழ்ச்சிகள் தான். தண்ணீரின் சலசலப்பு, பயணிகளின் கூட்டம், நங்கூரம் இறங்கி ஏறும் கட கட ஒலி, படிக் கட்டு போடப்படும் போதும் கயிறு இழுக்கப் படும் போதும் எழும்