மூவரும் காரில் அவனின் விமானம் வந்து சேரும் நேரத்திற்கு முன்பே விமான நிலையத்தை சென்று அடைந்தனர். குழந்தைகள் இருவரும் அப்பாவை பார்க்க போகும் சந்தோஷத்தில் இருந்தார்கள்... அவனிடம் சுயமரியாதை எல்லாம் விட்டு விட்டு நேராக பேசி பார்க்க வேண்டுமா இல்லையா என்ற குழப்பத்தில் அவளிருக்க, தூரத்தில் அன்புசெல்வனின் உருவம் தெரிந்தது. கடந்த சில நாட்களாக மனதில் இருந்த துயரம், வருத்தம் எல்லாம் கடந்து அவனை நேரில் பார்த்த சந்தோசம் அவள் முகத்தில் பொங்கியது...
வெளியில் நின்றிருந்த கூட்டத்தின் பக்கம் விழிகளை சுழற்றியபடி வந்தவன், அங்கே தெரிந்த ஜோவிதாவை பார்த்து ஆச்சர்யப்பட்டான். ஒரு சில வினாடிகளில், அவளருகில் நின்றிருந்த குழந்தைகளின் பக்கம் பார்வையை திருப்பியவன், அவசரமாக வந்து இருவரையும் வாரி அணைத்துக் கொண்டான்.
பக்கத்து அறையில் ரோஹினியும் ராஜாவும் மாறி மாறி அவனிடம் ஏதேதோ கதைகள் சொல்வது கேட்டது... வழியிலேயே உணவு முடித்து விட்டு வீட்டிற்கு வந்த இந்த இரண்டு மணி நேரம் என்றில்லை, விமான நிலையத்தில் அவனை பார்த்த முதல் வினாடியிலேயே தொடங்கியது...
அவளின் மனதில் ஒருவிதமான வெறுமை ஏற்பட்டது... குழந்தைகளுக்கு கூட அவள் வேண்டாமா?
பால்கனி சுவரில் சாய்ந்த படி அவள் தன்னை மறந்து அமர்ந்திருக்க,
“க்கும்...”
அருகில் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தாள். குழந்தைகளின் சத்தம் நின்றிருந்தது, தூங்கி விட்டனர் போலும்...
அவள் தன்னிலை பெற காத்திருந்தவனாக அவளின் அருகே சற்றே இடைவெளி விட்டு வந்து அமர்ந்தான் அன்புச்செல்வன்.