தேன் பலா - சசிகலா துரைராஜ்
“இந்த பாட்டி எப்பவுமே இப்படித்தான் இங்கும் அங்குமாய் அலைகழிச்சுகுட்டு இருக்கும்” என்று நினைத்த போதே ஒரு முரண்பாடு தெரிந்தது வந்தனாவிற்கு. இந்த வேலை அவளே ஏற்றுக்கொண்டது. தன் படிப்பு அப்படி. சி.ஏ படித்தவர்கள் தேவைப்பட்ட கம்பெனிகளுக்கு சென்று ஆடிட்டிங் செய்வது அவர்களது வேலை. அனுபவம் வந்த பிறகு வேறு மரியாதை. கற்றுக்கொள்ளும் நிலையில் இருப்பவர்களுக்கு மனம் பண்பட வேண்டும் .வேறுவழி இல்லை. அப்படி இருந்தால் தான் இந்த தொழிலில் முன்னுக்கு வர முடியும். மற்ற நேரங்களில் இயல்பாக ஏற்று நடத்தியவள் தான். இன்று நிலைமை வேறு. வீட்டில் திருமணம் நிச்சயித்து ஒரு மதத்தில் மணமாகப்போகிற பெண் .வருங்கால கணவனோடு பேச ஆயிரம் இருக்கும். அனால் வேலை நிமித்தம் பேசக்கூட நேரம் கிடைப்பதில்லை. என்ன செய்வது?
"உன் நிலைமை எனக்கு புரியுது வந்தனா நீ எப்போது பிரீயா இருக்கையோ அப்போது பேசலாம் " என்று பரதாப் அவளுடைய வருங்கால கணவன் சொல்லியிருந்தான் . அதனால் இரவு நேரங்களில் சில நிமிடங்கள் பேசிவிட்டு வைத்து விடுவாள். இல்லையென்றால் மறுநாள் எண்கள் வேறு வேறாய் தெரியும்.
இருப்பினும் தோழிகள் அனைவருமாய் சேர்ந்து வெளியே போகலையா? அது, இது என்று அசிங்கமாகிப் போனது.
"இன்றைக்கே இந்த வேலை முடியனும் வந்தனா . நோ டிலே , இப்போது நீ போகலாம் " என்று சொல்லிவிட்டு கௌசல்யா அவளது மேலாளர் அடுத்த பைலில் மூழ்கி விடுவார் .
"ஆமாம் கல்யாணமசெய்து கொஞ்சமாவது அட்ஜஸ்ட் பண்ணி வாழ்ந்திருந்தா நம்ம கஷ்டம் புரியும்.தனியாவே இருக்கவங்களுக்கு எப்படி புரியும்?" என்று அவளுடைய அலுவலக தோழி ராதா சொல்வாள்.
"உண்மைதான் ராதா .. ஆனா அதையும் மீறி மேடம் முகத்துல ஒரு கனிவு இருக்கு .நீ கவனிச்சிருக்கையா " என்று வந்தனா கேட்ட போது ,
"என்ன கனிவோ? நம்மோட என்னைக்காவது சிரிச்சி பேசி இருப்பாங்களா ?" என்று எதிர் கேள்வி கேட்டாள் .
"அது அவங்களோட இயல்பு இல்லையோ என்னவோ ராதா ?"
"சரி விடு... பாட்டியை மாற்ற நம்மால முடியாது .வேலையை முடிச்ச சீக்கிரம் வீட்டுக்கு கிளம்பலாம் "
"அது சரிதான் " என்றபடி இருவரும் கொடுக்கப்பட்ட வேலையை முடிக்க ஆயுத்தமானார்கள்.
இத்தனை நாட்களில் வந்தன அறிந்த ஒரு விஷயம் என்னவென்றால் வேலை செய்பவர்களுக்கு எல்லாவற்றையும் கற்று தேர்ச்சிபெற கௌசல்யா முனைவதுதான் .மேலோட்டமாய் பார்ப்பவர்களுக்கு வேலை வாங்குவதுபோல் தெரிந்தாலும் வேலை கற்றுக்கொள்ள வைப்பதில் திறமைசாலி . ஆனால் கொஞ்சம் முசுடு. யாரோடும் இயல்பாய் பேசுவதும் இல்லை, பழகுவதுமில்லை. கொஞ்சம் அன்பும் பாசமும் இருந்தால்தான் என்ன? என்று நினைத்தவள் ஒரு பெருமூச்சோடு தன் வேலையை தொடரந்தாள்.
அவர்கள் எடுத்த கம்பெனியின் ஆடிட்டிங் முழுவதுமாய் முடிந்தததும் ரிபோர்ட்டை தயாரித்து கௌசல்யாவின் கையெழுத்துக்காக வந்தபோது அவர் இருக்கையில் இல்லை.பெரும்பாலும் இப்படி விடுப்பு எடுப்பவர் இல்லை என்றாலும் , இந்த நேரத்தில் இருக்கையில் இல்லாதது அவரது தவறல்லவா? என்று எண்ணிவிட்டு தன்னையே குட்டிகொண்டாள்.அவள் முடிப்பாள் என்று அவருக்கு எப்படி தெரியும்? அத்துடன் மணி மாலை 5.30யை தாண்டி இருந்தது. அவர்கள் வேலை நேரமும் முடிந்து விட்டது.இருப்பினும் தன்னுடைய சின்சியரிட்டி அவருக்கு தெரிய வேண்டும் என்று எண்ணி மொபைலுக்கு போன் செய்தாள் .
"குட் வந்தனா ..யு ஆர் ஸ்மார்ட் " என்று அவர் சொல்லவும் வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பெற்ற மகிழ்ச்சி இளையவளுக்கு .
"தேங்க்ஸ் மாம். ஆனா உங்க கையெழுத்து வேணுமே ?"
"நாளைக்கு போடட்டுமா?"
"நாளைக்கு அவசரமா ஒரு வேலை இருக்கு மேம் .என்னால வர முடியாது."மறுநாள் ப்ரதாபோடு வெளியே செல்வதாய் ஏற்பாடு.
"அப்படின்னா என் வீட்டுக்கு உன்னால வரமுடியுமா வந்தனா?"
"ச்யூர் மேம் ...சொல்லுங்க "என்றுவிட்டு அவர் சொன்ன முகவரியை குறித்துகொண் டாள் .தன் இரு சக்கர வாகனத்தை எடுத்தவள், காகிதங்களை பத்திரபடுத்திக்கொண்டு கிளம்பினாள் .
ஒரு பெரிய வீட்டுடன், தோட்டத்தை கொண்டிருந்தது அந்த இடம்.
தனியே எப்படித்தான் இருக்காங்களோ என்ற எண்ணத்துடன் காலிங்பெல்லை அழுத்தினாள் . கதவு திறக்கப் பட்டது.திறந்தது பத்து வயது சிறுமி. ஆச்சர்யமாய் அவள் சிறுமியை பார்க்க,
"சொல்லுங்க ஆன்ட்டி .யார் வேணும் உங்களுக்கு?" என்றது அந்த பிஞ்சு.
தன்னிச்சையாய் "கௌசல்யா மேடம் " என்றாள் .
"அம்மம்மாவா...நீங்க? "
"வந்தனா "
"உள்ளே வாங்க. உட்காருங்க." என்று அமரவைத்துவிட்டு, "பாட்டி கெஸ்ட் வந்திருக்காங்க...காபி கொடுங்க "என்று சொல்லிவிட்டு பின்புறம் சென்றாள் .
வந்தனாவிற்கு ஆச்சர்யம் . இதென்ன? மேடத்திற்கு கல்யாணமே ஆகலையே? எப்படி இந்த சிறுமி அம்மம்மா என்றாள் என்று குழம்பிகொண்டிருக்கையிலே ,
"குடிம்மா "என்றபடி ஒரு நடுத்தர வயதை தாண்டிய பெண்மணி காபி கொடுத்தார் .
புன்னகையோடு "தேங்க்ஸ் "என்றபடி வாங்கிக் கொண்டபோதும் ஒன்றும் புரியவில்லை வந்தனாவிற்கு.
இதென்ன மாயாஜால வீடா?என்ற எண்ணம் தோன்ற மீண்டும் பின்னிருந்து தோன்றிய சிறுமி,
"வாங்க வந்தனா ஆன்ட்டி . அம்மம்மா கூப்பிடறாங்க " என்றபடி அழைத்து சென்றாள் .
பின்னே ஒரு பெரிய தோட்டம் . அதில் நிறைய இருக்கைகள் பார்க் போல.சில சிறுவர்கள்,சில வயதானவர்கள் அமர்ந்திருந்தனர்.அவர்களில் ஒருவரோடு பேசியபடி கௌசல்யாவும் அமர்ந்திருந்தார்.முகத்தில் அப்படி ஒரு பூரிப்பும் சிரிப்பும். வந்தனா இதனை எதிர்பார்கவில்லை.அவளை புன்னகையோடு வரவேற்று வேறு இருக்கையில் அமர செய்து ,
"கொடு வந்தனா " என்றார்.
அவள் எடுத்து கொடுக்க கைஎழுதிட்டவரிடம் ,
"மேடம் நீங்க கிராஸ் செக் செய்யலையா?" என்றாள் .
"நீ செய்தா கரெக்டா தான் இருக்கும்" என்று அவர் மேலும் சொல்லவும் வந்தனாவிற்கு உருகிவிட்டது .
தன் மேல் இவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தும் வெளிகாட்டாமல் இருந்திருக்கிறாரே !
"என்ன நாளைக்கு வருங்கால கணவரோடு வெளியே போறியா?" என்று பட்டென்று கேட்கவும் இல்லை என்று தலையசைக்க வந்துவிட்டு "ஆமாம் " என்றாள்.
"ஹேவ் எ நைஸ் டைம் "என்று தோளை தட்டஈகொடுத்தார் . இதைக்கூட யூகிக்க முடிந்திருக்கிறதே அவளுடைய மேலதிகாரியால்.
வேறேதோ உறுத்த ,"மேடம் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா ?" என்று கேட்க,
"இல்லையே வந்தனா!"
"பின்னே எப்படி இத்தனை பேர் ..அந்த பொண்ணுகூட உங்களை அம்ம்மம்மனு கூப் பிட்டாளே ? "
"உனக்கு குழந்தை பிறந்தாலும் நான் பாட்டிதான். கல்யாணம் செய்துக்கிட்டு என் வயித்துல பிறக்கலைன்னாலும் கடவுள் படைச்ச அத்தனை குழந்தைகளுக்கும் நான் அம்மாதான் ,பாட்டிதான்." என்று சொல்லியபடி வந்தனாவின் தலைநீவ ஆச்சர்யத்தில் உறைந்து போனாள் வந்தனா . ஆக சம்பாதிப்பதை பிறர்க்கு கொடுத்து அவர்கள் முகத்தில் சந்தோஷத்தை காண்கிறார் அவளுடைய மேலாளர்.
நினைக்கும்போதே உடல் சிலிர்க்க "கிரேட் மேம் ...நான் வர்றேன் " என்றபடி வெளியே வந்தவளின் கண்களில் அந்த பலாமரம் தென்பட்டது.
வெளியே முட்களாய் உள்ளே தேனாய் ...உண்மையில் பாட்டி தேன்பலாதான் என்று வியந்தாள் வந்தனா.