வார்த்தை தவறிவிட்டாய் - வத்சலா
அந்த ரயில் பயணத்தில் அவனை சந்தித்து விடுவாள் என்று கனவில் கூட நினைக்க வில்லை, அபர்ணா.
அவனை பார்த்துவிட மாட்டோமா என்று எத்தனை நாளாய் ஏங்கிக்கொண்டிருக்கிறாள் அபர்ணா.
மனதிற்குள் பட்டம்பூச்சிகள் பறக்க, ரயிலுக்குள்ளிருந்து தன் இருக்கையில் அமர்ந்தபடியே, ஜன்னல்வழியே மறுபடியும் பார்த்தாள்.
அவன்தானே அது? கல்லூரி நாட்களில் அவள் உருகி உருகி நேசித்த பரத் தானே அது.
நடை மேடையில் அந்த கடையின் அருகே நின்று தேநீரை சுவைத்தப்படியே மெல்ல நிமிர்ந்தவனின் பார்வை அவள் மீது பதிய அவன் கண்கள் சரேலென விரிந்தன.
அந்த நொடியில் ரயில் கிளம்ப எத்தனிக்க, சட்டென்று அடுத்த பெட்டியில் ஏறிக்கொண்டுவிட்டிருந்தான் அவன்.
உறவினர் திருமணத்தில் கலந்துக்கொண்டுவிட்டு மதுரையிலிருந்து சென்னை சென்றுக்கொண்டிருக்கிறாள் அபர்ணா. ரயில் திருச்சியை தாண்டி நகர்ந்துக்கொண்டிருந்தது.
அப்பாவும், அம்மாவும் உறங்கி விட்டிருந்தனர்.
அவனும் இதே ரயிலில் தான் வருகிறானா?
அடுத்த பெட்டியில் தான் அமர்ந்துக்கொண்டிருக்கிறானா? என்னை தேடி வருவானா? எதிர்பார்த்த படியே அமர்ந்திருந்தாள். வரவில்லை அவன். மனம் அவனை பார்க்க ஏங்கிக்கொண்டிருந்தது
வரவில்லை அவன். ஏன் வரவில்லை அவன்.? என்னை பார்த்த பிறகும் அவன் மனம் தவிக்க வில்லையா? மறந்துவிட்டானா என்னை?
கல்லூரியில் படிக்கும் காலத்தில், இருவருக்குமிடையில் அப்படி ஒரு நேசம்.
அப்போதே திருமணம் செய்துக்கொண்டு விடுவார்கள் என்றுதான் நண்பர்கள் எல்லாரும் எதிர்பார்த்தார்கள்.
ஆனால் இரண்டு வீட்டிலிருந்தும் சம்மதம் கிடைக்கவில்லை.
'முதல்லே படிச்சு சம்பாதிக்கிற வழியை பாருங்க ரெண்டு பேரும்' என்றார் அவனுடைய அப்பா. 'அப்புறம் கல்யாணத்தை பத்தி யோசிக்கலாம்'
முதுகலை படிப்பு முடிந்து, அவன் வேலை நிமித்தம் வெளிநாடு கிளம்பிய தினம் அவள் கையை பிடித்துக்கொண்டு சொன்னான் 'சரியாய் அஞ்சு வருஷம் வெயிட் பண்ணு, நான் திரும்பி வந்ததும் நம்ம கல்யாணம் நடக்கும். தைரியமா இரு.
அவன் வெளிநாடு சென்ற பின்பு அவனுடனான தொடர்பு விட்டு போனது. அப்படியே ஆறு வருடங்கள் கடந்து விட்டது.
இன்னமும் அவனுக்காகவே காத்துக்கொண்டிருக்கிறாள் அபர்ணா.
அரை மணி நேரம் கடந்த பின்பும் வரவில்லை அவன். அதற்கு மேலும் காத்திருக்க பொறுமை இல்லாதவளாய் எழுந்தாள் அபர்ணா
அப்பாவும் அம்மாவும் உறங்கிக்கொண்டிருந்தனர். அடுத்த பெட்டியை நோக்கி மெல்ல நடந்தாள்.
அவன் அமர்ந்திருந்த இருக்கையை நெருங்கினாள் அபர்ணா.
அவள் வந்ததை கூட கவனிக்காமல் அந்த பெண்ணுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தான் பரத்.
மனம் சுள்ளென்று பற்றிக்கொண்டது அவளுக்கு.
யாராம் அவள்? மனதில் இருந்த மொத்த உற்சாகமும் கரைந்து போனது .இதனால் தான் என்னை பார்க்க வரவில்லையா?
அதற்குமேல் அங்கே நிற்க கூட மனமில்லாமல் தன் இருக்கையில் வந்தமர்ந்து கொண்டாள் அபர்ணா.
அவள் மனம் நிற்காமல் சுழன்று கொண்டிருந்தது.
சில நிமிடங்கள் கழித்து சைடு லோயரில் அமர்ந்து ஜன்னலின் வெளியே இருட்டை வெறித்துக்கொண்டிருந்தவளின் அருகே, வந்தமர்ந்தான் பரத், அப்புறம் மேடம் எப்படி இருக்கீங்க?' என்றபடியே.
இதழ்களில் ஓடிய புன்னகையுடன் கண்களால் அவளை மெல்ல அளந்தான் பரத்.
பதிலே சொல்லாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் அபர்ணா.
என்ன அபர்ணா அப்படி பார்க்கிறே? என்றான் பரத்.
மெல்ல கேட்டாள் அபர்ணா 'உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா பரத்.?'
சரேலென்று நிமிர்ந்தவன் சில நொடிகள் அவள் கண்களையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். பின்னர் நிதானமான குரலில், சிறிது கூட சலனமே இல்லாமல் சொன்னான் 'கல்யாணம் தானே ஆயிடுச்சே'
அதிர்ந்து போனாள் அபர்ணா.
'என்னை மறந்து இன்னொரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள எப்படி முடிந்தது அவனால்?.' அதை துளிக்கூட வருத்தமே இல்லாமல் என்னிடமே சொல்கிறானே' மனம் பற்றி எரிந்தது அவளுக்கு.
அடுத்த சில நொடிகளில் இருக்கையிலிருந்து எழுந்து விட்டிருந்தான் பரத்..
தன்னுடைய கார்டை அவளிடம் நீட்டியபடியே . 'இதிலே என் அட்ரஸ், போன் நம்பர் எல்லாம் இருக்கு முடிஞ்சப்போ வீட்டுக்கு வா அபர்ணா நிறைய பேசணும் உன்கிட்டே' என்று நகரப்போனவன்,
சட்டென்று நின்று 'உன் நம்பர் குடு' என்றான்.
வேண்டா வெறுப்பாய் அவள் தனது எண்ணை கொடுக்க அதை தன் கைப்பேசியில் பதித்துக்கொண்டு நகர்ந்துவிட்டிருந்தான் பரத்.
பதினைந்து நாட்கள் கடந்து விட்டிருந்தன. இன்னமும் மனம் ஆறவில்லை அபர்ணாவுக்கு. நினைக்கும் போதே கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.
கல்லூரி நாட்களில் எப்படி எல்லாம் பழகினான் அவன்?
இவனுக்காக இத்தனை நாள் காத்திருந்ததெல்லாம் வீணா?
அப்பாவும் ,அம்மாவும் அத்தனை சொன்னார்கள். பதிலுக்கு சண்டை போட்டாள் அவள். அவன் எப்படியும் வந்து விடுவான் என்று வாதாடினாள்.
இப்போது அவர்களிடம் என்ன சொல்வதாம்?.
தாங்கிக்கொள்ளவே முடியவில்லை அவளால்
'அவனிடம் நாக்கை பிடுங்கிக்கொள்வதை போல் நான்கு கேள்விகள் கேட்காவிடில் மனம் ஆறாது என்று தோன்றியது.
எத்தனை பெரிய நம்பிக்கை துரோகமிது முடிந்தால் பளார்,பளாரென அறைந்தே விட வேண்டும்.' மனதில் ஆத்திரம் பொங்கியது