நினைவெல்லாம் நீ - ஜீவானந்தம்
அதிகாலை தூக்கம் கலைந்து விஷ்வா எழுந்தபோது அவனது மனைவி உறங்கிக் கொண்டிருந்தாள் .பாவம் முந்தைய தினம் கலைப்புப் போலும் . பெரும்பாலும் நேரம் தவறித் தூங்குபவள் அல்ல நித்யா. காலை காபி முதல் இரவு வரை அனைத்தையுமே விஷ்வாவின் கையில் திணிப்பவள் . அப்படிப்பட்டவள் உறங்கியபோது ஏழுப்ப மனமில்லாமல்படுத்திருந்தவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அவளுடைய கணவன். ஆனால் அந்த பார்வையின் வீரியமோ அல்லது தினமும் எழும் பழக்கமோ? நித்யா மெல்ல கண் விழிக்க எதிரே இருந்தவனது வரிவடிவம் அந்த மெல்லிய விளக்கொளியில் தெரிந்தது. முகத்தை சுருக்கியபடி எழுந்தவள் அவனை கவனியாதது போல் தன் வேலைகளை கவனிக்கலானாள். ஏனோ இந்த கோபம் என்று எண்ணியவன் இன்னுமும் சிறிது நேரம் பார்ப்போம் என்று கிளம்பலானான். காலை காபியை நீட்டியவளிடம் "தேங்க்ஸ் நித்தி "என்றவனின் முகத்தை ஒரு முறை பார்த்தவள் ,இதுக்கொன்னும் குறைச்சல் இல்லை என்று மனதிலே நினைத்தபடியே அமைதியாக சென்று விட்டாள் .
அவள் கோபத்தைவிட அவளது அமைதி விஷ்வாவை வெகுவாக பாதித்தது. அவள் மௌனத்தின் காரணம் என்னவென்று லேசாய் தெரிந்தபோதும் கவனிக்காமல் விட்டுவிடலாம் என்று நினைத்தான்.ஆனால் பேசினால்தான் இந்த விஷயத்துக்கு முடிவு எடுக்க முடியும் போல ..ஆனால் இது அதற்கு உகந்த நேரமல்ல. அவனுக்கு ஒரு முக்கிய மீட்டிங் இருந்தது. இப்பொழுது பேச ஆரம்பித்தால் வார்த்தைகள் எங்குபோய் முடியுமென்று சொல்வதற்கில்லை. அதனால் மாலை பொறுமையாய் பேசிக்கொள்ளலாம் என்று நினைத்தபடியே அமைதியாய் இருந்தான். அவளை அலுவலகத்தில் விடும்போது கூட திரும்பிப் பார்க்காது சென்று விட்டாள் . மனதில் வலித்த போதும் தன் மனைவியைத் தன்னால் சரிசெய்ய இயலும் என்று விஷ்வாவும் அலுவலகத்திற்கு சென்றுவிட்டான். அலுவலகத்தில் வேலை மிகுதியில் சில மணிநேரங்கள் எந்த நினைப்பும் இடமிருக்கவில்லை.
உணவு இடைவேளையின்போது கிடைத்த சில நிமிடங்களில் விஷ்வாவின் நினைப்பு அவளை ஆக்ரமித்திருந்தது. திரும்பிப்பாராமல் வந்துவிட்டாலும் விஷ்வாவின் பார்வை அவள் கைஅசைப்புக்கு ஏங்கியிருக்குமே என்று நினைத்தபோதே மனதில் வலித்தது. பாவம், அவனும்தான் அலுவலகம் செல்கிறான் . அவனுக்கும்தான் எவ்வளவோ பிரச்சனைகள் என்று கணவனுக்காய் வக்காலத்து வாங்கிய மனதை என்ன செய்ய? அவன் தனக்காய் பேசாதது தப்பு என்று மனம் மறுபுறம் பலமாய் இடித்துரைத்தது.
"என்ன பலமான யோசைனையா நித்யா?" என்று தோளை தட்டியபடி வந்தமர்ந்தாள் வசந்தி.
"ஒண்ணுமில்ல வசந்தி"
"ஆனா முகத்துல டன் டன்னா சோகம் வழியுதே?"
நித்யா அமைதி காக்கவும் ,
"என்ன அத்தான் கூட சண்டையா?" என்று வசந்தி விஷயத்திற்கு வர, தன் தோழியிடம் மறைக்க தோன்றவில்லை நித்யாவிற்கு.
" நேத்து அவர் வீட்டு விசேஷம் ...அதுதான் அவங்க அக்க பொண்ணோட நிச்சைய விழாவிற்கு போனோம். ஆனா அங்க யாருமே என்னை கண்டுக்கலை.வாமான்னு ஒரு வார்த்தை கூட இல்லை.அவரோடு எல்லோரும் பேசினாங்க.உபசரிச்சாங்க .ஆனா என்னை ஒரு மனுஷியாவே மதிக்கலை.தெரியுமா?"
" ஓ .அதிதான் ப்ரச்சனையா ? நீங்க தனிகுடுத்தினம் வந்தது அவங்களுக்கு பிடிக்கல போல?அதனாலதான் எல்லோரும் இப்படி செய்திருக்காங்க."
“ஆமா வசந்தி. நீ சொல்றது சரிதான்.அதுதான் காரணம்னு எனக்கும் புரிஞ்சுது. ஆனா ஒரு பொது இடத்துல இப்படி நடந்துக்கிறது அநாகரிகமில்லையா ?"
“அநாகரிகம் தான் .அது அவங்களுக்கு தெரியலையே?”
“அதுமட்டுமில்லாம நீங்க தனியா வந்தது விஷ்வா எடுத்த முடிவு.இதுல உன்மேல கோபப்பட கூட நியாமில்ல.”
“ஆமா. சரி தான்”
சில பேருக்கு எந்த நியாமும் தெரியறது இல்ல நித்யா .இதுக்காக நீ கவலை படலாமா?"
" என்னோட கவலை அதில்ல..நேற்று இவ்வளவு நடந்தபோதும் விஷ்வா அங்கே தான் இருந்தாரு.ஒரு வார்த்தை யார்கிட்டேயும் இதைப்பத்தி கேட்கலை..அத்தோடு வீட்டிற்கு வந்தபிறகும் எங்கிட்ட இதைப்பத்தி பேசலை.தெரியுமா?"
" ஒரு வேலை , மனசு கஷ்டப்படும்னு பேசலயோ என்னவோ?"
"ஆனா நேற்று எனக்கு நேர்ந்த அவமானம் அவரை பாதிக்கலையே . அதுதான் கஷ்டமா இருக்கு"
"ஷ் .. யார் சொன்னது? அவர் சொன்னாரா?"
" இல்ல "
"பிறகெப்படி நித்யா? நேற்று எத்தனை மணிக்குமேல வீட்டுக்கு வந்தீங்களோ? அத்தனை மணிக்குமேல கண்விழிச்சு பேசனுமான்னு நினைச்சிருக்கலாம். காலையிலேயும் அவசரமா கிளம்பி வந்திருப்பீங்க.கொஞ்சம் அவருக்கு நேரம் கொடுக்கலாமே நித்யா " என்று வசந்தி சொன்னபோது மெய்யாகவே அதுதான் உண்மையோ என்றுகூட தோன்றிவிட்டது நித்யாவிற்கு .
காலையில் அவள்தான் முகத்தில் அறைவதுபோல் நடந்துகொண்டாளே. காபி கொடுத்தபோதுகூட நிதி என்று அவன் செல்லமாய்தான் அழைத்தான் என்று நினைத்து கொண்டிருந்தபோதே ,
"போய் பேசு.. ஒரு முடிவு கிடைக்கும் " என்று தோழியைத் தேற்றினாள் வசந்தி .
அன்று மாலை அவனுக்குமுன் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி தர வேண்டும் என்று நினைத்தபடி வீட்டிற்கு வந்தபோது வீடு ஏற்கனவே திறக்கப்பட்டு இருந்தது.உள்ளே யாரோ பேசும் குரல் . அருகே செல்ல, தெளிவாய் காதில் விழுந்தது.
" என்ன இருந்தாலும் , நீயும் சின்ன அக்காவும் , அம்மாவும் செய்தது ரொம்ப தப்புக்கா . நான் இந்த வீட்டில் பிறந்தவன்.நீங்க என்ன செய்தாலும் ஏத்துக்குவேன் . ஆனா நித்யா, என்ன நம்பி வந்தவ. அவளுக்கு ஒரு அவமானாம்னா அது எனக்கும்தான் . நான்தான் முழுபொறுப்பு. நேற்று அத்தனை பேர் மத்தியில அவளை கூப்பிடாம , பேசாம ரொம்பவும் அசிங்கமா இருந்துது. நான் கண்டிப்பா இதை உன்கிட்டிருந்து இதை எதிர்பார்கலை .அந்த இடத்துல இதைபத்தி பேசினா அசிங்கம்னுதான் நான் அமைதியா இருந்தேன்.எங்களால உன் வீடு விசேஷத்துல பிரச்சனை வேணாம்னுதான். அவளும் இதைபத்தி ஒரு வார்த்தை கேட்கலை தெரியுமா? அம்மாகிட்டயும் சொல்லுக்கா .அவ ஒன்னும் என்ன தனியா வர கூப்பிடல. அம்மா செய்ததெல்லாம் பொருத்துக்குட்டு அமைதியாத்தான் இருந்தா.எனக்குதான், நம்மை நம்பி வந்தவ கஷ்டப்டராலேனு மனசு வெறுத்து தனியே கூட்டி வந்தேன்.புரியுதாக்கா?”
"புரியுதுடா. இனி இப்படி நடக்காது. வேணும்னா நான் அவகிட்ட மன்னிப்பு கேட்கட்டுமா?"
" அதெல்லாம் வேணாம். நானே சொல்லிடறேன்". என்று சொல்லி முடிக்கவும் நித்யாவினுள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள். மெய்யாகவே விஷ்வா அவளுக்காக செய்கிறவன்தான் .சட்டென்று அவனைத் தவறாக நினைத்து விட்டாளே பாவம் நாளெல்லாம் என்ன தவித்தானோ? என்று எண்ணியபடியே காலிங்பெல்லை அழுத்தினாள் .
விஷ்வா வந்து திறந்தபோது ஆச்சர்யமாய் அவளைப் பார்த்தபடி கடிகாரத்தை பார்த்தான்.
"பர்மிஷன்ல வந்தேன் "என்று புன்னகைதவள் , அவனுடைய தமக்கையை பார்த்ததும்,
"வாங்க அண்ணி.எப்போ வந்தீங்க "என்று விசாரிக்க,
"இப்போதாம்மா..ஸ்வீட்ஸ் கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன்"என்றவர் அவளிடம் தந்த கவரை வாங்கியபடி,
"இதுக்கு நீங்க வரணுமா? நமக்குள்ள எதுக்கு போர்மல்டீஸ் "என்று நித்யா சொல்ல ,வாஞ்சையாய் அவரைப் பார்த்தவர்,
"சாரிமா . அம்மா பேச்சை கேட்டு தப்பா நடந்துக்கிட்டோம். எங்களை மன்னிப்பாயா? " என்று கேட்க,
"என்ன அண்ணி பெரிய வார்த்தையெல்லாம் பேசறீங்க?நீங்க உட்காருங்க. நான் காபி கொண்டு வரேன்." என்றபடி கிச்சனுள் நுழைய இருதுளி கண்ணீர் அவள் சேலையை நனைத்தது..புரிதல் அவள் கணவனிடம் இருந்ததை நினைத்து.
காற்றுகூட கனமடி
உன்காதல் இல்லையென்றால்
மூச்சுகூட சுமையடி
உன்சுவாசம் இல்லையென்றால்
எப்பொழுதும் விஷ்வா சொல்லும் மாய வார்த்தைகள் காற்றில் கலந்து அவள் நெஞ்சில் நிறைந்தது.