“அப்பா, காலேஜ் மட்டும் இல்லைப்பா, . பஸ், ட்ரைன் எதுலயும் போக முடியலை. எங்க போனாலும் ஒரு மாதிரி பார்க்கறாங்க. எனக்கு செத்துடலாம் போல இருக்கு”, தன் மகனின் நிலை அவனை எந்த அளவு காயப்படுத்தி இருக்கிறது என்று வருந்தினாலும், அவன் சாகப் போகிறேன் என்று சொன்னதில் கோவப்பட்ட மகேஷ்,
“ஜஸ்ட் ஸ்டாப் இட் அபிஷேக். பளார்ன்னு அறைஞ்சிடப் போறேன். நீ இப்படி இருக்கறது உன்னோட தப்பில்லைடா”
“கரெக்ட்பா, அது என் தப்பில்லைதான், ஆனால் அது யாருக்கும் தெரியறதில்லையே, எங்களை மாதிரி ஆளுங்களும் மனதளவில் ஊனமானவங்களுக்கு சமம்தான். என்னை விட்டுடுங்கப்பா, நான் பொறக்கவே இல்லைன்னு நினைச்சுகோங்க”
“அபிஷேக் நீ இங்க வந்து first அப்பா பக்கத்துல உக்காரு”, என்று அழைக்க அவனும் வந்து தன் தந்தையின் பக்கத்தில் அமர்ந்தான்.
“அபிஷேக் நீ எங்களுக்கு யாரு?”, என்று கேட்க, என்ன கேள்வி இது என்பதுபோல் பார்த்த அபிஷேக்கும், “நான் உங்களோட பையன்”
“அப்படி இருக்கும்போது உன்னை விட்டுட்டு நாங்க எப்படிடா இருப்போம். நீ நல்லவனா, படிச்சவனா, குறையே இல்லாம இருந்தாதான் உன்னை ஏத்துப்போம்ன்னா அது குடும்பமே இல்லைடா. நீ பெரிய ஆளா வந்தா எங்களுக்குப் பெருமைதான். அப்படியே இல்லாம, நீ எந்த விதமான அடையாளமும் இல்லாம ரொம்ப சராசரியான ஆளா இருந்தாலும், நீ எங்கப் பையன்தாண்டா. நாங்க உன்னை விட முடியாது”
“வேண்டாம்ப்பா, இன்னும் கொஞ்ச நாள்ல என்னோட நிலை நம்ம சொந்தக்காரங்களுக்கெல்லாம் தெரிஞ்சுடும். நீங்க எங்கயும் போக முடியாது, அவமானப் போயடும்ப்பா. சரி உங்களுக்காக நான் தற்கொலை எல்லாம் பண்ணிக்கலை. பாம்பேல இந்த மாதிரி இருக்கறவங்க எல்லாம் சேர்ந்து ஒரு இடத்துல இருக்காங்களாம். நான் அங்கப் போய்டறேன்”, என்று கூற சுகன்யா அழ ஆரம்பித்தார்.
“ப்ச், சுகன்யா அழறத நிறுத்து. சரி அபிஷேக் நீ சொல்ற படியே செய்யலாம். பாம்பே போகணுமோ, இல்லை தற்கொலை பண்ணிக்கணுமோ, எதா இருந்தாலும் மூணு பேரும் சேர்ந்தே செய்யலாம், என்ன சொல்ற”, என்று கேட்க, “அப்பா, என்னப்பா இது, நான்தானே இப்படி இருக்கேன். நீங்க எதுக்கு என்னோட சேர்ந்து கஷ்டப்படணும், இல்லை சாகணும்”
“ஏன்னா நீதான் எங்களுக்கு எல்லாம், நம்ம சொந்தக்காரங்க பேசுவாங்க, இல்லை என் நண்பர்கள் கிண்டல் பண்ணுவாங்க அப்படிங்கறத்துக்காக எல்லாம் உன்னை நாங்க விட முடியாது. நீ இப்படி இருக்கும்போதுதாண்டா குடும்பத்தோட சப்போர்ட் உனக்கு நிறைய தேவைப்படும். உனக்கு நாங்க எப்பவுமே பக்க பலமாதான் இருப்போம். அதே மாதிரி நீ இப்படி இருக்கறது அவமானம் கிடையாது. அதை முதல்ல புரிஞ்சுக்கோ. உறுப்பு குறைபாடு மாதிரி இதுவும் ஒரு குறைபாடுதான். அவங்க எப்படி தன்னம்பிக்கையோட இருக்காங்களோ நீயும் அதே மாதிரிதான் இருக்கணும். எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்கதான். அதை எதிர்த்து ஜெயிச்சு வரணும். நீ எது செய்தாலும் உனக்கு பின்னாடி நானும் அம்மாவும் நிப்போம்”
“அப்பா, அம்மா ரெண்டு பேரும் உண்மையா சொல்லுங்க. நான் இப்படி இருக்கறது உங்களுக்கு கஷ்டமா இல்லையா?”
“கஷ்டம் இல்லடா, ஆனா வருத்தமா இருக்கு. நீ எங்களுக்கு ஒரே மகன். உனக்கு கல்யாணம், குழந்தை அப்படினெல்லாம் பார்க்க முடியாதேன்னுதான்”, என்று சுகன்யா வருத்தத்துடன் கூற,
“இல்லை சுகன்யா. இவனும் கல்யாணம் பண்ண முடியும், அதே மாதிரி குழந்தை பெத்துக்கவும் வாய்ப்பு இருக்கு. அதெல்லாத்துக்கும் நிறைய டைம் இருக்கு. இப்போ முதல்ல அடுத்தவங்க கிண்டல் பண்றாங்கன்னு உன்னை வருத்திக்கறதை விட்டு வெளில வா. நாம மொதல்ல நமக்காக வாழணும், அடுத்தவங்களுக்காக இல்லை. சொந்தக்காரங்க இன்னைக்கு உன்னை கேலி பண்ணிப் பேசுவாங்க. அவங்களே நாளைக்கு நீ உயர்ந்த நிலைக்கு வந்துட்டேனா உன்னை உயர்த்தி வச்சு பேசுவாங்க. அதனால அடுத்தவங்க சொல்றதை காதுல போட்டுக்காம, ‘என் நிலை எதுவா இருந்தாலும் நான் தலை நிமிர்ந்து வாழ்வேன்’, அப்படின்னு அவங்களைப் பார்த்தேன்னு வைய்யி, அவங்க பேச வாயே இல்லாமப் போய்டும்”, என்று அவனுள் தன்னம்பிக்கையை ஊற்ற ஆரம்பித்தார் மகேஷ்.
“Really I’m blessed-ப்பா. இந்த மாதிரி ஒரு குடும்பம் கிடைக்க. என்னை மாதிரி இருக்கற நிறைய பேர் தவறான பாதைக்கு போற ரீசன் அவங்க குடும்பமே அவங்களை கைவிடறதுதான். ஆனால் நீங்களும், அம்மாவும் எனக்காக இருக்கீங்க அப்படிங்கறதே எனக்கு பெரிய உந்து சக்தியா இருக்கு. இனிமே யார் என்ன சொன்னாலும் நான் கவலைப் பட போறதில்லை. என்னோட குறிக்கோள் நல்ல டைரக்டர் ஆகணும் அப்படிங்கறதுதான். அதுக்காகத்தான் நான் visual communication கோர்ஸ் எடுத்தேன். அந்த இலட்சியத்தை நோக்கி மட்டுமே என்னோட பயணம் இனி இருக்கும். நடுவுல என்னைப் பத்தி வர்ற விமர்சனங்களை நான் காது கொடுத்து கேக்கப் போறதில்லை”
“Very Good அபிஷேக். கண்டிப்பா உன்னோட முயற்சில நீ வெற்றி பெறுவ. அம்மாவும், அப்பாவும் உன் கூடவேதான் இருப்போம்”, என்று கூற, தன் வாழ்க்கைப் பாதையில் முட்கள் நிறைய வந்தாலும் கூடவே, ரோஜாவாக இதமளிக்க தன் குடும்பம் இருக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்க்கையை எதிர்கொள்ளத் தயாரானான் அபிஷேக்.
This is entry #29 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest.